புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் தொடக்கம்.. இரண்டு ஆண்டுகளில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டம்
டெல்லி: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கப்பட்டன.
தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் இட நெருக்கடி இருப்பதாகக் கூறி, மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்ட முடிவு செய்தது. தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் முன் இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
மேலும், ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியையே சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்தக் கட்டுமானப் பணிகளுக்கு விடுக்கப்பட்ட டென்டர் டாடா கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
அடிக்கல் நாட்டிய பிரதமர்
புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமான பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். இருப்பினும், நாடாளுமன்ற கட்டடம் தொடர்பாக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. மனுக்கள் மீதான விசாரணை முடிந்த பிறகே கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அடிக்கல் நாட்டும் விழாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
உச்ச நீதிமன்றம்
கட்டுமான அனுமதிக்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், 'சென்ட்ரல் விஸ்டா' திட்டக் கட்டுமான பணிகளைத் தொடங்க அனுமதி அளித்தது. அதே நேரம், நிலத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அந்த அனுமதியும் கடந்த வாரம் வழங்கப்பட்டது.
கட்டுமானப் பணிகள் தொடக்கம்
இதையடுத்து, மிக விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி டாடா நிறுவனம் இன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது. ரூ. 971 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஸ்மார்ட் டிஸ்பிளே, பயோமெட்ரிக் வாக்குகளைச் செலுத்தும் முறை உள்ளிட்ட பல அட்டகாசமான வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும், 94 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய நாடாளுமன்ற கட்டடம் அருங்காட்சியகமாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
2022இல் முடிக்கத் திட்டம்
நாட்டின் 75ஆவது சுதந்திர தினம், வரும் 2022ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்பு புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் குளிர்கால கூட்டத்தொடரை இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் தொடங்க 35 நாட்கள் தாமதம் ஆகியிருந்தாலும்கூட திட்டமிட்டபடி கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என்று டாடா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது