உ.பி, உத்தரகண்ட் விஷச் சாராய பலி எண்ணிக்கை 116ஆக உயர்வு.. சிறப்பு விசாரணைக்கு உத்தரவு
டெல்லி: 100க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட உத்தரப் பிரதேசம், உத்தர கண்ட் விஷச் சாராய சாவுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்டில் விஷச்சாராயம் அருந்திய 116 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 297 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போலி மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட கடைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில், விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை தெரிவித்திருப்பதாவது: பகீரா என்பவரையும், அவரது மகன் சோனு என்பவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்திலிருந்து விஷச் சாராயத்தை வாங்கிய அவர்கள், உத்தர கண்டிலுள்ள பலுபூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விநியோகித்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தாங்கள் வாங்கி வந்த விஷச் சாராயம் வழக்கமான நிறத்தில் இல்லாமல் பால் போன்று இருந்ததாகவும், அதிலிருந்து ஒரு விதமான வாடை வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர் என்று கூறியுள்ளனர்.