பணம் எடுக்க வரும் மக்கள் விரலில் மை வைக்கச் சொன்னவராச்சே சக்திகாந்த தாஸ்!
Recommended Video
டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சக்திகாந்த தாஸ், இந்திய மக்களால் மறக்க முடியாத மனிதர். பிரதமர் மோடி அரசு அமல்படுத்திய பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வங்கிக்கு (தங்கள்) பணத்தை எடுக்க வரும் மக்களின் விரலில் அழியாத மை வைக்க உத்தரவிட்டவர்தான் சக்திகாந்த தாஸ். அப்படிப்பட்டவரை மக்களால் மறக்க முடியுமா என்ன?!
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சந்தித்த வேதனைகளையும், துயரங்களையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. அந்த துயர வடுவே இன்னும் மனதை விட்டு போகாத நிலையில் அந்த சமயத்தில் மிக முக்கியமாக வலம் வந்தவரான சக்திகாந்த தாஸை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது மக்களை அதிர வைத்துள்ளது.
பண மதிப்பிழப்பு சமயத்தில் சக்திகாந்த தாஸ் தினசரி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்து வந்தார். அப்போது எடுக்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள், அறிவிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையும், சக்கிகாந்த தாஸின் படிப்பையும் வைத்து தற்போது சமூக வலைதளங்களில் விவாதங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன.
[தமிழக தலைமைச் செயலாளராக வேண்டியவர்.. பணமதிப்பிழப்பின் மூளை.. யார் இந்த சக்திகாந்த தாஸ்? ]
சர்ச்சையை ஏற்படுத்திய முடிவுகள்
பணமதிப்பிழப்பு சமயத்தில் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட சில முடிவுகள் மக்களிடையே கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தின. இந்த நடவடிக்கைகளை இவராக எடுக்கவில்லைதான். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்தான். ஆனால் எதிர்ப்புகளை தாஸ்தான் எதிர்கொண்டார்.
கை விரலில் மை
சக்திகாந்த தாஸ் அறிவித்த முடிவுகளில் ஒன்று பணம் எடுக்க வங்கிக்கு வருவோர் விரலில் அழியாத மை வைப்பது. இதற்கு சக்திகாந்த தாஸ் சொன்ன காரணம், மக்கள் திரும்பத் திரும்ப வங்கிக்குப் பணம் எடுக்க வருகின்றனர். இதில் முறைகேடு நடக்கிறது. எனவே விரலில் அழியாத மை வைக்கப்படும் என்றார். இது மக்களை அதிர வைத்தது.
|
வங்கிகளில் கூட்டம் கூட காரணம்
இதேபோல பணம் கிடைக்காமல் அலைந்த மக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் கால் கடுக்க நீண்ட வரிசையில் இரவு பகலாக காத்துக் கிடந்து வேதனைப்பட்டனர். அதுகுறித்து விளக்கம் அளித்த தாஸ், மக்கள் திரும்பத் திரும்ப வருவதால்தான் கூட்டம் என்று கூறி மக்களை மேலும் டென்ஷனாக்கினார்.
கற்றது வரலாறு
சக்திகாந்த தாஸ் படிப்பை வைத்து இப்போது மக்கள் விமர்சித்து வருகின்றனர். இதற்கு முன்பு ஆளுநராக இருந்தவர்கள் பொருளாதார படிப்பை பின்னணியாக கொண்டவர்கள். ஆனால் தாஸ் எம்ஏ வரலாறு என்று கூறப்படுகிறது. இதை வைத்தும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுதான் 'Modinomics' என்று மக்கள் கிண்டலடிக்கின்றனர்.
|
எங்களுக்கும் கவர்னர் போஸ்ட் கிடைக்குமா
இது ஆசிஷ் ஜோஷி என்பவரின் கருத்து. எனது சீனியர் ஆர்பிஐ கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். எனது கல்லூரியில் வரலாறு படித்தவர் அவர். எனது கல்லூரியில் வரலாறு படித்தவர்கள் எல்லாம் இப்போது சந்தோஷமாகியுள்ளோம். எங்களுக்கும் இந்த போஸ்ட் கிடைக்கலாம் இல்லையா என்று கூறியுள்ளார்.
|
இவர்கள் இடத்தில் இனி இவர்
இது ஆனந்த் ரங்கநாதன் என்பவரின் பதிவு. இதுவரை இருந்த சில கவர்னர்கள் ஒய்வி ரெட்டி பிஎச்டி (பொருளாதாரம்), டி. சுப்பாராவ் பிஎச்டி (பொருளாதாரம்), ரகுராம் ராஜன் பிஎச்டி (பொருளாதாரம்), உர்ஜித் படேல் பிஎச்டி (பொருளாதாரம்), சக்திகாந்த தாஸ் எம்ஏ வரலாறு.