அவசரத்திற்கு பயன்படுத்த வேண்டிய வாய்தாவை தவறாக பயன்படுத்துகின்றனர்.. ஜனாதிபதி கருத்து
சென்னை: தமிழக நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் நகல்களை தமிழ் மொழியிலேயே வழங்க, நீதிமன்ற நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் குடியரசுத் தலைவர். இந்த விழாவில் உச்சநீதிமன்றமுன்னாள் தலைமை நீதிபதியும் கேரள ஆளுநருமான சதாசிவத்திற்கும், உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி பாப்டே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ஆகியோருக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டாக்டர் பட்டம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது பேசிய குடியரசுத் தலைவர் ராம்நத் கோவிந்த், பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது . உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக திறம்பட செயல்பட்டவர் சதாசிவம் என்று பேசினார்.
மேலும் பேசிய ஜனாதிபதி சட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீதிக்கான அணுகுமுறையை சாதாரண மக்களும் தொிந்து கொள்ள வேண்டும். நீதியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டும் முக்கியமானதல்ல.
அது தொடர்பான விஷயங்களை அவர்கள் அறிந்த மொழியில், அவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் சிறந்தது. எனவே தீர்ப்புகளின் நகல்களை உள்ளூர் அல்லது பிராந்திய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். சட்ட விதிகளை எளிமையாக்குவது ஆகியவை தற்போதைய தேவையாக உள்ளது
தாம் முன்னர் கேட்டு கொண்டபடி சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் ஆங்கிலத்தில் உள்ள தீர்ப்புகளை, இந்தி மொழியில் மொழி பெயர்ப்பு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.அதே போல தமிழகம் மற்றும் கேரளாவிலும் தீர்ப்பின் நகல்களை அந்தந்த மாநில மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து வழங்க வேண்டும்.
சீக்கியர்கள் வசதிக்காக அமைய உள்ள கர்த்தார்பூர் வழித்தடம்.. இந்தியா - பாக்., அதிகாரிகள் பேச்சு
மேலும் பேசிய ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு நீதி விரைவாக கிடைக்கச் செய்வதில் வழக்கறிஞர்களுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது.
எனவே வாய்தா என்ற கருவியை அவசர கால நடவடிக்கைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் வழக்கு விசாரணையை தாமதப்படுத்த தவறான நோக்கத்தில் வாய்தா பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நீதி கிடைப்பதற்காக அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. பணக்காரர் ஒருவரும், ஏழை ஒருவரும் ஒரே மாதிரியாக சட்டத்தை அணுக முடியவில்லை என்னும்பட்சத்தில், அது நமது குடியரசு முறையை கேலி கூத்தாக்கி விடும். இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்
தரமணியில் நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் மற்றும் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.