கொரோனா- டெல்லி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து பத்திரிக்கையாளர் தற்கொலையில் சர்ச்சை
டெல்லி: கொரோனா தொற்றால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து பத்திரிக்கையாளர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
டெல்லியில் வசித்து வந்த தருண் சிசோடியா (வயது 37) இந்தி நாளிதழ் ஒன்றின் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என புகார் தெரிவித்திருந்தார் தருண் சிசோடியா. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் அவர் புகார் செய்திருந்தார்.
இதனால் தருண் சிசோடியா தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதன்பின்னர் தருண் சிசோடியாவிடம் இருந்து செல்போனை மருத்துவமனை நிர்வாகம் பறித்துக் கொண்டு அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தது.
இதனிடையே மருத்துவமனையின் 4-வது மாடியில் இருந்து குதித்து தருண் சிசோடியா தற்கொலை செய்து கொண்டதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்திருக்கிறது. ஆனால் தாம் இணைந்திருந்த வாட்ஸ் அப் குரூப்களில், தான் படுகொலை செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என தருண் சிசோடியா பதிவு செய்திருக்கிறார்.
தற்போது தருண் சிசோடியாவின் சர்ச்சை மரணம் தொடர்பாக விசாரணைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 48 மணிநேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.