உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 24 கோடி.. 100 கோடி டோஸ் தடுப்பூசியை நெருங்கும் இந்தியா
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21.76 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
Recommended Video
மேலும், கொரோனா வைரஸ் பரவலால் இதுவரை 48.96 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவியவர்களில் 1.77 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 81 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுக்க பரவி பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்து விட்ட பிறகும், இன்னும் பல நாடுகளில் அதன் பரவல் வேகம் அதிகமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இதனிடையே, 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்துவதை கொண்டாட இந்தியா தயாராகி வருகிறது. "அக்டோபர் 18 அல்லது 19ம் தேதிகளில் 100 கோடி கொரோனா தடுப்பூசி என்ற மைல்கல்லை எட்டுவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், சாதனையை கொண்டாட பல நிகழ்வுகளை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்டதா கொரோனா? வேக்சின் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கிய இந்தியா
துறைமுகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்தியா 100 கோடி டோஸை நிறைவு செய்யும் நேரத்தில் பெருமைப்படுத்தும் அறிவிப்புகள் வெளியிடப்படும், சுகாதார மையங்களில் சுகாதாரப் பணியாளர்கள் இந்த பணியில் முக்கிய பங்கு வகித்ததால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தின், முக்கிய சாதனைகளை வெளிப்படுத்தும் மேலும் பல திட்டங்களை வகுத்து வருகிறோம். அமைச்சர்கள் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் தங்கள் பகுதியில் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும், வியாழக்கிழமை குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை மட்டுமே இந்தியா செலுத்தியுள்ளது. சுமார் 27 லட்சம் டோஸ்கள் மட்டுமே போடப்பட்டது. வயதுவந்த மக்கள் அனைவருக்கும் 2021ம் ஆண்டு டிசம்பருக்குள் தடுப்பூசி போடப்படும் என்று அரசு முன்பு கூறியது. ஆனால் இப்போது பயனாளிகளின் அதிகபட்சக் கவரேஜை நோக்கி முன்னேறி வருவதாக அரசு தெரிவித்துள்ளது.