24 மணி நேர கொரோனா பரவலில் உலகப் பட்டியலில் 2ஆம் இடத்தில் இந்தியா பகீர் ரிப்போர்ட்!!
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உலகளவில் இரண்டாம் இடத்துக்கு சென்றது. இன்று வெளியான தகவலின்படி 24 மணி நேர தொற்று எண்ணிக்கை 22, 510 ஆக உள்ளது. 7,20, 346 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உயிரிழப்பும் நாள் ஒன்றுக்கு 467ஆக அதிகரித்து, இதுவரை 20,160 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தினப்படி கொரோன தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 24 மணி நேரத்துக்கு ஒரு முறை தினமும் காலை தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. இன்று காலை வெளியான அறிக்கையில், ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 22, 510 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே ஒரு நாள் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்துக்கு சென்றுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.
இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 7,20, 346 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு ஒரே நாளில் 467ஆக அதிகரித்து 20,160 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 4,39,947 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,59,557 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவை முந்தி அமெரிக்காவில் ஒரு நாள் தொற்று பரவல் எண்ணிக்கை 54,999 ஆக இருந்து வருகிறது. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவுக்கு 1,30,000 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒரு நாள் தொற்று பரவலில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. பிரேசிலில் நாள் ஒன்றுக்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 21,486 அதிகரித்துள்ளது. அந்த நாட்டில் இதுவரை 16,26,071பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் திங்கள் கிழமை 5,368 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. உயிரிழப்பு 204ஆக பதிவாகி இருந்தது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,11,987ஆக அதிகரித்து, உயிரிழப்பு 9,206ஆக உள்ளது.
கொரோனா ஒருநாள் பாதிப்பில் உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா 2-வது இடம்
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. உயிரிழப்பு 61ஆக இருந்தது. தொற்று எண்ணிக்கை 1,14,978 ஆகவும், பலி எண்ணிக்கை 1,571 ஆகவும் அதிகரித்துள்ளது. டெல்லியில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,379 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கொரோனா தொற்று காற்றில் பரவும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர். இதற்கு பதில் அளித்து இருக்கும் உலக சுகாதார நிறுவனம் இதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.