60, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி - எப்படி பதிவு செய்வது
60வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
டெல்லி: 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. அதற்கான மருத்துவ சான்றிதழ்களையும் கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் மாவட்டங்களில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முறையாக மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த தடுப்பூசி போட முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவைகள் கொண்டு கோவின் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும் இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசியின் முதல்கட்ட பணிகளின் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட 3 கோடி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அனைவருக்கும் தடுப்பூசிகள் இலவசமாகவே செலுத்தப்பட்டன. ஆனால் இரண்டாம் கட்டத்தில் அரசு மையங்களில் மட்டுமே தடுப்பூசிகள் இலவசமாகச் செலுத்தப்படும் என்றும் தனியார் மையங்களில் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது.
தனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.250க்கு போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 11.46 கோடி பேர் பாதிப்பு - 9 பேர் மீண்டனர்
மாநில அரசின் சுகாதார காப்பீட்டு திட்டங்களின் கீழ் வரும் அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத்-பி.எம்.ஜே.ஏ திட்டத்தின் கீழ் இயங்கும் 10,000 மருத்துவமனைகள், சி.ஜி.எச்.எஸ். இன் கீழ் 687 இயங்கும் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி வழங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.