உலகின் மெகா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து போடும் பணி.. இந்தியாவில் தொடங்கியது!
டெல்லி: இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கியது. இந்த பணியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
Recommended Video
கொரோனாவால் இந்தியாவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்துள்ளது.
கோவாக்சின், கோவிஷீல்டு இந்தியாவுக்கு வந்தது எப்படி? .. தடுப்பு மருந்துகளின் தொழில்நுட்பம் என்ன?
மத்திய அரசு
அவற்றை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த வாரம் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி
அதன்படி உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த நிலையில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.
யூனியன் பிரதேசம்
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3,006 இடங்களில் இத்திட்டம் காணொலி வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 100 பேர் வீதம் 3 லட்சத்திற்கும் மேலானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
சிறுவர்கள்
கர்ப்பிணிகள், சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படாது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் தடுப்பூசி போடப்படுகிறது. முதல் கட்டமாக ஜூலை மாதத்திற்கு கொரோனா முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு கீழே குறிப்பிட்ட நோய்களுக்கு ஆளானவர்கள் என முதன்மை பட்டியலில் உள்ள 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பதிவு
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு கொரோனா தடுப்பூசி மையங்களும் 3 பிரிவுகளாக இயங்கிறது. அதில் பதிவு அல்லது காத்திருப்பு பகுதி, தடுப்பூசி பிரிவு, கண்காணிப்பு அறை. ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட நேரம், நாளில் கொரோனா தடுப்பு மருந்து மையத்திற்கு வரலாம்.
ஆவணங்கள்
அவ்வாறு வரும் பயனாளிகளின் ஆவணங்கள் தடுப்பூசி செலுத்தும் மையத்தின் வாயிலில் சரிபார்க்கப்படும். மத்திய அரசின் கோவின் செயலி மூலம் பதிவு செய்திருத்தல் வேண்டும். இதையடுத்து அவர்கள் தடுப்பூசி போடும் மையத்திற்கு அனுப்பப்படுவர். பின்னர் கோவிட் 19தடுப்பூசி போடப்படும். அவர்கள் கண்காணிப்பு அறைக்கு அனுப்பப்படுவர்.
படுக்கைகள்
அங்கு நவீன வசதிகள் செய்யப்பட்ட படுக்கைகள், குடிநீர், கழிப்பறைகள், இருக்கும். அங்கு அவர்கள் அரைமணி நேரம் தங்க வைக்கப்படுவர். அவர்களுக்கு தடுப்பூசியால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுகின்றனவா என கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு மையங்களிலும் அவசர கால சிகிச்சை அளிக்கும் உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருக்கும்.
100 பேருக்கு மட்டுமே ஊசி
கோவின் செயலி மூலம் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் தினமும் 100 பேருக்கு மட்டுமே ஊசி போடப்படுகிறது. வாரத்தில் 4 நாட்கள் செலுத்தப்படுகிறது. ஒரு டோஸ் முடித்தவுடன் 28 நாட்கள் கழித்து அடுத்த டோஸ் வழங்கப்படுகிறது. ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 24 மணி நேரமும் செயல்படும் 1075 அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.