கொரோனா பாதிப்பு வரும் 2021 வரை தொடரும்.. இந்தியாவில் 2ஆவது அலை.. எய்ம்ஸ் இயக்குநர் பரபரப்பு தகவல்
டெல்லி: கொரோனா பாதிப்பு வரும் 2021 ஆம் ஆண்டு வரை தொடரும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 லட்சம் பேருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக கொரோனாவால் 87 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த கொரோனா பாதிப்பு எப்போது கட்டுக்குள் வரும் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியாவிடம் இந்தியா டுடே நேர்காணல் நடத்தியது.
காற்றில் கொரோனா பரவுவது உண்மைதான்.. எப்படி என நிரூபித்த சீனா.. பேருந்தில் நடந்த ஷாக்!
கொரோனா விட்டு வைக்கவில்லை
இதில் ரன்தீப் குலேரியா கூறுகையில் கொரோனா பாதிப்பு அடுத்த ஆண்டும் பரவாது என சொல்ல முடியாது. கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அதனால் அடுத்த ஆண்டும் இந்த பாதிப்பு தொடரும். இந்தியாவில் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. சிறு கிராமங்கள் மற்றும் ஊரக பகுதிகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.
10 லட்சம்
நம் நாட்டு மக்களின் மக்கள்தொகையை பொருத்து கொரோனா பாதிப்பு அதிகரிக்கும். இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலை வீசி வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுவது மேலும் அதிகரிக்க வேண்டும். தற்போது ஒரு நாளைக்கு நாம் 10 லட்சத்திற்கும் மேலானோருக்கு கொரோனா சோதனை எடுத்து வருகிறோம்.
அபாயம்
பலர் கொரோனாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதில்லை. டெல்லியில் பார்த்தோமேயானால் மக்கள் மாஸ்க்குகளை அணிவதில்லை. கூட்டங்களில் கூடுகிறார்கள். சாலைகளில் கொரோனாவுக்கு முன்னர் இருந்ததை போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தான் செய்யும். தலைநகர் டெல்லியில் 70 சதவீதம் மக்கள்தொகைக்கு எளிதில் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக ஒரு சர்வே கூறுகிறது.
சோதனை
கொரோனாவுக்கு ஏராளமான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இந்தியாவிலிருந்து 3 தடுப்பு மருந்துகள் உள்ளன. எந்த தடுப்பு மருந்தாக இருந்தாலும் அவை பாதுகாப்பு கொடுப்பது மிக முக்கியமான விஷயமாகும். ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பூட்னிக் வி என்ற தடுப்பு மருந்தின் மாதிரி சிறியதாகும். அதை கொண்டு அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தன்னார்வலர்களுக்கு சோதனை நிகழ்த்துகிறார்கள்.
ஆன்டிபாடி
சில சிறிய பக்க விளைவுகளுடன் உடலில் ஆன்டிபாடிகளை அவை மேம்படுத்துவதாக கூறுகிறார்கள். ஆனால் தடுப்பு மருந்துகளை பெரிய அளவில் சோதனை செய்ய வேண்டும். இன்னும் சில மாதங்களில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து உருவாகிவிடும். எல்லாம் சரியாக போனால் இந்த ஆண்டு இறுதியில் கூட மருந்து தயாராகிவிடும்.
சுத்தப்படுத்துதல்
மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படவுள்ளன. அதில் பயணம் செய்வோர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். ரயிலில் கைப்பிடிகளை பிடிக்க வேண்டியிருப்பதால் பயணத்தை முடித்துக் கொண்டும், பயணத்தின்போதும் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். கைகளை அவ்வப்போது சுத்தப்படுத்திக் கொண்டால் கிளவுஸ் அணிய தேவையில்லை.
சமூக இடைவெளி
கிளவுஸ் அணிந்தாலும் அவற்றை நாம் சுத்தப்படுத்த வேண்டும். கிளவுஸ் அணிந்த கைகளுடன் முகத்தில் கைகளை வைக்கக் கூடாது. பள்ளிகளை திறக்கும் சூழலில் நாம் இல்லை என்றே கருதுகிறேன். பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்தால் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உண்டு. சிறிய குழந்தைகள் மாஸ்க் அணிவார்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது.
Recommended Video
3 முதல் 6 மாதங்கள்
அவர்கள் பிறரிடம் தொற்றிக் கொண்டு அதனுடன் வீட்டுக்கு வருவார்கள். வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு பரவும். எனவே பள்ளிகள் திறப்புக்கு நாம் சில நேரம் பொறுத்திருக்க வேண்டும். உலகின் சில பகுதிகளில் கொரோனா பாதித்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று வருகிறது. இந்த நேரத்தில் அது பெரிய பிரச்சினையில்லை. இந்த கொரோனா மீண்டும் தொற்றாமல் இருக்க 3 முதல் 6 மாதங்கள் வரை அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார் குலேரியா.