இந்தியாவில் எந்த நேரத்திலும் கொரோனா 3-வது அலை.. அக்டோபரில் அதி உச்சம் தொடும்: வல்லுநர்கள் எச்சரிக்கை
டெல்லி: இந்தியாவில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் தொடங்கும் என்றும் அக்டோபரில் அதி உச்சமாக ஒருநாள் பாதிப்பு 1,50,000க்கும் அதிகமாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதேநேரத்தில் கொரோனா 2-வது அலையைப் போல 3-வது அலை கோரத்தாண்டவமாடாது எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2-வது அலை சற்று ஓய்ந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 40,000 என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 500ஐ தாண்டியதாக உள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20,000 என்ற அளவில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு நாட்களை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களில் மக்கள் பெருந்திரளாக கூடுவர். அதனால் தமிழகத்தில் பெரும்பாலான கோவில்கள் மூடப்பட்டு சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடி 18 அல்லது ஆடிப்பெருக்கு நாளில் ஆறுகளின் படித்துறைகளில் ஒன்று கூடி சடங்குகள் செய்வதற்கும் இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 19.89 கோடி; இந்தோனேசியாவில் ஒரே நாளில் 1,808 பேர் மரணம்
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா 3-வது அலை பாதிப்பு இந்த மாதம் தொடங்கிவிடும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஹைதராபாத், கான்பூர் ஐஐடி வல்லுநர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். கொரோனா 3-வது அலையில் ஒருநாள் பாதிப்பு 1 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும்; மிக அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் ஒருநாள் பாதிப்பு 1,50,000 ஆக இருக்கும் எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா 2-வது அலை இந்தியாவை மிக மோசமாக தாக்கியது. கொரோனா 2-வது அலையில் அதி உச்சமாக ஒருநாள் பாதிப்பு 4 லட்சமாக இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஆகியவற்றால் உயிரிழப்புகள் பெரும் எண்ணிக்கையில் ஏற்பட்டன. வட இந்திய மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் சடலங்கள் கங்கை, யமுனை நதிகளில் வீசப்பட்ட பேரவலமும் நிகழ்ந்தது.
இந்தியாவில் தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு 41,831 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 541 ஆகவும் உள்ளது. இந்தியாவில் இதுவரை 49.49 கோடிக்கும் அதிகமான (49,49,89,550) தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது மத்திய அரசு. மேலும் கூடுதலாக 8,04,220 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன. சுமார் 3 கோடி (3,00,58,190) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நேற்று 4,10,952 ஆக இருந்தது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.30 சதவீதமாகும். வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.42 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.34 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 55 நாட்களாக அன்றாட தொற்று உறுதி விழுக்காடு 5 சதவீதத்திற்குக் குறைவாக ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து 35 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் கொரோனா 3-வது அலை எந்த நேரத்திலும் இந்தியாவில் தொடங்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.