செம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்
டெல்லி: சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து இந்தியா திரும்பிய 406 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1700 ஆகியுள்ளது. உலகம் முழுக்க 22 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.
இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக 7000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும் நினைத்தை விட வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில், முதல் ஒருவாரம் மட்டும் கொரோனா வைரஸ் மிக மெதுவாக பரவியது. ஆகவே இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.
எத்தனை பேர் திரும்பினார்கள்
இந்த நிலையில் சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து 406 இந்தியர்கள் கடந்த சில வாரங்கள் முன் நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 15 இந்திய அதிகாரிகள் சென்றனர்.
என்ன கூடுதல்
அதன்பின் கூடுதலாக 326 பேர் இந்தியர்கள் சீனாவில் இருந்து இந்தியா வரவழைக்கப்பட்டனர். பயணிகள் சோதித்து விமானத்தில் ஏற்றுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லா பயணிகளும் கடும் சோதனைக்கு பின்பே விமானத்தில் ஏற்றப்பட்டனர். நோய் தாக்குதல் இல்லாதவர்கள்தான் முதலில் இந்தியா கொண்டு வரப்பட்டனர்.
எப்படி இருந்தது
இந்தியா கொண்டு வரப்பட்ட பின் இவர்கள் எல்லோரும் 17 நாட்கள் தனியாக வைக்கப்பட்டு இருந்தனர். முதலில் மருத்துவ பரிசோதனை இவர்களுக்கு செய்யப்பட்டது. அதன்பின் 17 நாட்கள் இவர்கள் தினமும் கண்காணிக்கப்பட்டனர். தனி அறையில் இது செய்யப்பட்டது. பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக டெல்லியில் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது
யார் எல்லாம்
இந்த நிலையில் சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து இந்தியா திரும்பிய 406 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 406 பேரில் 192 பெண்கள் மற்றும் 204 ஆண்கள் இருந்தனர். அதேபோல் 7 குழந்தைகள் இருந்தனர். இவர்கள் எல்லோருக்கும் சோதனை செய்யப்பட்டது. இவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.