2020-21 கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை செப்டம்பரில் தொடங்கலாம்.. யுஜிசிக்கு ஆய்வுக்குழு பரிந்துரை
வரும் கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை ஜூலை மாதத்திற்கு பதிலாக செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்கலாம் என்று பல்கலைக்கழக மானிய குழுவிற்கு (யுஜிசி) ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வரும் 2020-21 கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை ஜூலை மாதத்திற்கு பதிலாக செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்கலாம் என்று பல்கலைக்கழக மானிய குழுவிற்கு (யுஜிசி) ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்ட லாக் டவுன் மொத்தமாக மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் அதற்கு முன்பே மார்ச் 16ம் தேதியே மூடப்பட்டது.
இந்த நிலையில் லாக் டவுன் காரணமாக இன்னும் கல்வி நிறுவனங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. இது தொடர்பாக ஆராய்ச்சி நடத்த பல்கலைக்கழகம் மானிய குழு இரண்டு ஆய்வு குழுக்களை உருவாக்கி இருந்தது. கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்களில் தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகளை எப்போது தொடங்கலாம்.
எப்போது அடுத்த கல்வி ஆண்டிற்கான பாடங்களை தொடங்கலாம் என்று ஆராய குழு அமைக்கப்பட்டது. ஹரியானா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.சி குஹாட் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது. இன்னொரு குழு லாக் டவுன் நேரத்தில் எப்படி ஆன்லைன் பாடங்களை விரிவாக்கலாம் அதை எப்படி லாக் டவுனுக்கு பிறகு நீட்டிக்கலாம் என்று ஆராய அமைக்கப்பட்டது. இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாகேஸ்வர ராவ் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது.
இரண்டு குழுக்களும் கடந்த வெள்ளிக்கிழமை தங்களது ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில்தான் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை ஜூலை மாதத்திற்கு பதிலாக செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்கலாம் என்று பல்கலைக்கழகம் மானிய குழுவிற்கு ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.
அதே சமயம் கல்வி நிறுவனங்களுக்கு வசதி இருந்தால் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தலாம். இல்லையென்றால் லாக் டவுன் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இந்த இரண்டு அறிக்கைகளையும் யுஜிசி தற்போது ஆராய்ந்து வருகிறது. வரும் நாட்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.
இந்த ஆய்வு குழுவின் பரிந்துரையை அப்படியே மொத்தமாக ஏற்குமா இல்லை யுஜிசி இதில் மாற்றங்கள் செய்யுமா என்பது விரைவில் தெரிய வரும். அதேபோல் கல்லூரி நுழைவு தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது தொடர்பாகவும் ஆலோசனைகளை செய்து வருகிறது. நீட், ஜேஇஇ தேர்வுகளை எப்போது நடத்த வேண்டும் என்றும் இந்த வாரம் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.