இந்தியாவில் கொரொனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9.13 லட்சமாக குறைவு!
டெல்லி: இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் (ஆக்டிவ் கேஸ்கள்) எண்ணிக்கை 9.13 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த 66 நாட்களில் முதல் முறையாக ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் பொதுவாக குறைய தொடங்கி உள்ளது. நாட்டில் திங்கள்கிழமையன்று 60,471 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியானது. இதில் தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 12,772 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.95 கோடியை தாண்டியது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,732 ஆக உள்ளது. இதில் மகாராஷ்டிராவில்தான் அதிகமாக 1592 பேர் கொரோனாவால் நேற்று உயிரிழந்தனர்.
நாட்டில் கொரோனா பாதிப்பு 60,471ஆக குறைந்தது...1,17,525 பேர் மீண்டனர் - 9,13,378 பேருக்கு சிகிச்சை
இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,77,031 ஆகும். கடந்த 24 மணிநேரத்தில் 1,17,525 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2.82 கோடியை தாண்டியுள்ளது.
தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 9,13,378 ஆகும். கடந்த 66 நாட்களில் முதல் முறையாக ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் கீழே குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.