கொரோனா பாதிப்புகள்: இனவெறி அவதூறுகளால் தாய்நிலம் திரும்பும் வடகிழக்கு மாநில மக்கள்!
டெல்லி: கொரோனா பாதிப்பை முன்வைத்து தங்கள் மீதான இனப்பாகுபாடுகளும் அவதூறுகளும் அதிகரித்துள்ளதால் பிற மாநிலங்களில் இருந்து பெருமளவிலான வடகிழக்கு மாநில தொழிலாளர்கள் தங்களது தாய் நிலத்துக்கு திரும்புகிற பரிதாபங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் 500க்கும் அதிகமானோரை தாக்கி தற்போது 1,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறிவிட்டதா? இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம்
லாக்டவுனால் நெருக்கடிகள்
இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் லாக்டவுன் பல்வேறு புதிய புதிய நெருக்கடிகளையும் சவால்களையும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படுத்தியுள்ளன. லாக்டவுனில் மூலம் வேலைதேடி சென்ற மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான பிற மாநில தொழிலாளர்கள் பசியோடும் பட்டினியோடும் முடங்கிக் கிடக்கின்றனர். இவர்களால் சொந்த ஊருக்கும் திரும்ப முடியாத நிலை. ஆகையால் ஒவ்வொரு மாநில முதல்வர்களும் பிற மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு தங்களது மாநில தொழிலாளர்களை பாதுகாக்க உணவு அளிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பல நூறு கிமீ நடைபயணம்
இன்னொருபக்கம் இனிவேலை இல்லை; அடுத்த நேர உணவுக்கு என்ன செய்வது? சொந்த ஊருக்கே திரும்புவோம் என்கிற முடிவுடன் பெருநகரங்களில் இருந்து தங்களது ஊர்களுக்கு கால்நடையாகவே பல நூறு கிலோ மீட்டர் பயணிக்கின்றனர் தொழிலாளர்கள்; பல்லாயிரக்கணக்கானோர் மாநிலம் விட்டு மாநிலம் 300 கி.மீ, 500 கி.மீ தொலைவுக்கு பிள்ளை குட்டிகளுடன் நடந்தே செல்கிற பெருந்துயர காட்சிகளையும் பார்க்க முடிகிறது. நெஞ்சை பதற வைத்துக் கொண்டிருக்கும் இந்த பேரவலங்களுக்கு தீர்வு காண முடியாமல் எல்லோரும் கை பிசைந்துநிற்கின்றனர்.
வடகிழக்கு மாநிலத்தவருக்கு சிக்கல்
இவற்றுக்கு மத்தியில் வடகிழக்கு மாநிலத்தவரின் பிரச்சனை பூதாகரமாக வெடித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் முகச் சாயலும் சீனர்களின் முகச்சாயலும் ஒன்றாக இருக்கிறது. ஆகையால் கொரோனா தொற்று நோய் பாதிப்புக்கே வடகிழக்கு மாநிலத்தவரே காரணம் என்கிற அறியாமையில் அவர்களை இழிவுபடுத்துகிற கொடுஞ்செயல்கள் நடந்து வருகின்றன. வடகிழக்கு மாநிலத்தவரைப் பார்த்தாலே கொரோனா என கூப்பாடு போடுகின்றனர். அவர்களை இழிவுபடுத்துகின்றனர்.
சொந்த மாநிலம் திரும்பும் மக்கள்
இதனால் இனியும் பிற மாநிலங்களில் தங்களால் வாழ முடியாது என்கிற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் வடகிழக்கு மாநிலத்தவர் தங்களது தாய்நிலத்துக்கு திரும்புகிற கொடுமை நடக்கிறது. இவர்களும் கிடைத்த வாகனங்களில் சட்டவிரோதமாகவே தங்களது தாய்நிலத்துக்கு திரும்புகின்றனர். இதுவும் மிகப் பெரிய சவாலாக மாநிலங்களுக்கு அமைந்துள்ளது.