அறிகுறி இல்லை.. கொரோனா வந்ததே தெரியாமல் பலியாகும் மக்கள்.. மருத்துவர்கள் குழப்பம்.. என்ன நடக்கிறது?
டெல்லி: கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் அறிகுறியே இல்லாமல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான விஷயமாக மாறி வருகிறது.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து பரவி வருகிறது. டிசம்பர் தொடக்கத்தில் சீனாவில் வுஹன் நகரத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க 170 நாடுகளை தாண்டி பரவி வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் குறித்து இன்னும் முழுமையாக உலக நாடுகள்புரிந்துகொள்ளவில்லை. கொரோனா வைரஸின் அடிப்படை குணங்கள் குறித்து இன்னும் உலகம் முழுக்க தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் இன்னும் கண்டுபிடிக்க முடியாத பல குணங்களை கொண்டு இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்.. சுற்றி வளைத்து சீல் வைக்கும் மத்திய அரசு.. அதிரடி திட்டங்கள்!
அறிகுறிகள் என்ன
கொரோனாவின் அறிகுறிகள் குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் உங்களை தாக்கி இருந்தால் மொத்தம் மூன்று விதமான முக்கிய அறிகுறிகள் மூலம் அதை கண்டுபிடிக்க முடியும். இருமல்தான் கொரோனாவின் முதல் அறிகுறி ஆகும். இது வறட்டு இருமல் போல இருக்கும். அடுத்த அறிகுறி காய்ச்சல். உங்கள் உடல் சூடு அதிகரிக்கும். காய்ச்சல் அதிகமாக இருந்தால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம். மூன்றாவது அறிகுறி மூச்சு விடுவதில் சிரமம். உங்களுக்கு மூச்சு விட முடியாமல் இருந்தால் அது கொரோனாவாக இருக்கலாம்.
அறிகுறிகள் எப்படி எல்லாம் தோன்றும்
பொதுவாக கொரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் சென்று 21 நாட்களுக்குள் இது போன்ற அறிகுறிகள் தென்படும். உங்கள் உடலுக்குள் சென்றதும், முதலில் கொரோனா வைரஸ் அங்கிருக்கும் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்கி அழிக்கும். உங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் செல்களை தாக்கி அழிக்கும். இதனால் உங்களுக்கு இருமல், காய்ச்சல், மூச்சு விட சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும். இப்படித்தான் உங்களுக்கு நோய் இருப்பது தெரிய வரும்.
அறிகுறி சமயங்களில் இருக்காது
ஆனால் தற்போது பல நாடுகளில் கொரோனா வைரஸ் அறிகுறியே இல்லமால் பரவி வருகிறது. அதாவது ஏ என்ற நபருக்கு அவரின் நண்பர் யார் மூலமாவது கொரோனா வரும். ஆனால் அவருக்கு கொரோனா வந்தது அவருக்கே தெரியாது. அவர் எப்போதும் போல ஆரோக்கியமாக இருப்பார். வெளியே சுற்றுவார். திடீர் என்று மூச்சு விட சிரமம் ஏற்பட்டு மருத்துவமனை சென்றால்தான் தெரியும் அவருக்கு கொரோனா இருந்தது.
தமிழகத்தில் நடக்கிறது
தமிழகத்திலும் கூட இப்படி நடக்கிறது. உதாரணமாக தமிழகத்தில் சில நோயாளிக்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை. அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையிலும் நெகட்டிவ் என்றே வந்துள்ளது. ஆனால் 21 நாட்கள் கழித்து திடீர் என்று அறிகுறி ஏற்படுகிறது. பின் சோதனை செய்தால் பாசிட்டிவ் என்று வருகிறது. உலகம் முழுக்க இப்படி அறிகுறியே இல்லாமல் பல ஆயிரம் பேருக்கு கொரோனா பரவி வருகிறது.
பலருக்கும் கொரோனா பரவும்
சீனாவில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி பெண் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது. அவருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா வந்தது. இதுதான் முதல் அறிகுறி இல்லாத கேஸ். இப்படி அறிகுறி இல்லாமல் வரும் கொரோனா காரணமாக, நோயாளிகள் பல இடங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஊர் ஊராக சுற்ற வாய்ப்புள்ளது. இதன் மூலம் பலருக்கு இன்னும் கொரோனா தீவிரமாக பரவும். அதாவது அந்த 'ஏ' என்ற நபர் அவருக்கே தெரியாமல் கொரோனாவை பலருக்கு பரப்ப வாய்ப்பு உள்ளது .
டெஸ்ட் செய்ய வேண்டும்
இதற்கு ஒரே தீர்வு அதிக அளவில் கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்பதுதான். அதாவது அறிகுறியே இல்லை என்றாலும், அவர் கொரோனா உள்ள யாரையாவது தொடர்பு கொண்டு இருந்தால் சோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் கொரோனா பலருக்கு பரவுவதை தடுக்க முடியும். ஏனென்றால் இப்படி அறிகுறி இல்லாமல் கொரோனா ஏற்படும் நபர்கள்தான் சிகிச்சை பெற முடியாமல் பலியாகிறார்கள்.
சீனாவில் மீண்டும் வருகிறது
அதேபோல் சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட தொடங்கி உள்ளது. சீனாவில் தற்போது கொரோனா ஏற்படும் நபர்களில் பலருக்கு அறிகுறியே இல்லை. அதேபோல் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் கொரோனா அறிகுறியே இல்லாமல் பலருக்கு கொரோனா ஏற்படுகிறது. அமெரிக்காவில் 30% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா ஏற்படுவதாக கூறுகிறார்கள். ஐஸ்லாந்தில் 50% பேர் கொரோனா அறிகுறியே இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள்தான்.
தமிழகத்தில் வேகமாக செய்தார்கள்
தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா உள்ளது. இதில் இதில் 415 பேருக்கு கொரோனா அறிகுறியே தென்படவில்லை. இவர்கள் எல்லோரும் டெல்லி மாநாடு சென்றவர்கள். இவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அறிகுறி ஏற்படும் முன்பே சோதனை செய்து அவர்களுக்கு முடிவுகளை அறிவித்து இருக்கிறார்கள். அறிகுறி ஏற்படும் முன்பே வேகமான சோதனை மூலம் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.