கொரோனா: தனிமைப்படுத்தலுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார் பாஜக எம்பி துஷ்யந்த் சிங்!
டெல்லி: கொரோனா தொற்று பாதித்துள்ள பாலிவுட் பாடகி கனிகா கபூரின் பார்ட்டியில் பங்கேற்ற நிலையில் பாஜக எம்.பி. துஷ்யந்த்சிங், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றிருக்கிறார்; ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை காலை விருந்தில் சந்தித்தும் பேசியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பிய பாலிவுட் பாடகி கனிகா, லக்னோவில் பார்ட்டி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா, அவரது மகனும் பாஜக எம்.பி.யுமான துஷ்யந்த்சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது பார்ட்டியில் பங்கேற்ற வசுந்தரராஜே சிந்தியா, மகன் துஷ்யந்த் சிங் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கையாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும் துஷ்யந்த்சிங், கனிகா கபூரின் பார்ட்டியை முடித்த கையோடு டெல்லி சென்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றிருக்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் எம்.பி.க்களுக்கு அளித்த காலை விருந்திலும் பங்கேற்றிருக்கிறார். பின்னர் குரூப் புகைப்படமும் எடுத்துள்ளனர்.
இதன் பின்னர்தான் கனிகாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் துஷ்யந்த்சிங். தற்போது துஷ்யந்த் சந்தித்த எம்.பிக்களான, டெரெக் ஓ பிரெய்ன், வருண் காந்தி, அனுப்ரியா பட்டேல் ஆகியோரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.