கொரோனா: இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு- பாதிப்பு 500ஐ தாண்டியது!
டெல்லி: கொரோனாவால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக மெதுவாக இருந்த கொரோனாவின் தாக்கம் ஒவ்வொரு நாளும் கிடுகிடுவென அதிகரிக்கிறது.
திங்கள்கிழமை ஒரே நாளில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இத்தாலியில் இருந்து குடும்பத்துடன் நாடு திரும்பிய 55 வயது மதிக்கத்தக்க நபர், கொல்கத்தாவில் திங்கள்கிழமையன்று உயிரிழந்தார். இது மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த முதலாவது உயிரிழப்பாகும். இதேபோல் இமாச்சலப் பிரதேசத்திலும் 69 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர்.
ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த கேரளா.. பிளான் 'சி'யை கையில் எடுத்த சைலஜா.. என்ன?
உயிரிழப்புகள் தொடருகின்றன
மும்பையில் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒருவர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தார். முதலில் இவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாக கூறப்பட்டது. பின்னர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று தாக்கம் இல்லை என தெரியவந்தது. இருப்பினும் மும்பையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுநீரக கோளாறு உள்ளிட்டவைகளால் அவர் உயிரிழந்தார். இன்றும் மும்பையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமீரகத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் அவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இதற்கு முன்னதாக குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்திருந்தனர். இதில் மகாராஷ்டிராவில் 2 பேர் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500
இந்தியாவில் தற்போதைய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக கேரளாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் 23 பேரும் குஜராத்தில் 12, தமிழகத்தில் 2, பீகாரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் லாக் டவுன்
நாடு முழுவதும் கொரோனா வெகுவேகமாக பரவுவதால் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது மொத்தம் 548 மாவட்டங்கள் கொரோனாவை தடுக்க சீல் வைக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களிலும் கொரோனா பாதித்த மாவட்டங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப், மகாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சிக்கிம், மிசோரமில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. தமிழகத்தில் இன்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமலாகிறது.
விமான போக்குவரத்து நிறுத்தம்
கொரோனாவை கட்டுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக நாளை முதல் அனைத்து விமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை முதல் சர்வதேச விமானங்கள் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்குள் விமானங்கள் நுழையும் 107 நுழைவு வாயில்கள் மூடப்படுவதாக நேற்று இரவு மத்திய அரசு அறிவித்தது.