மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் திடீரென அதிகரித்த ஒருநாள் கொரோனா பாதிப்பு
டெல்லி: மகாராஷ்டிரா, பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்திருக்கிறது.
நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,77,367. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மீண்டவர்கள் எண்ணிக்கை 1,06,76,287.
1,56,250 கொரோனா மரணங்கள்
இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,56,250. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,40,242.
மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பு
மாநிலங்களில் மகாராஷ்டிராவில்தான் மிக அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தம் 20,87,632 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19,89,963 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தம் 51,713 பேர் இம்மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
கேரளா பாதிப்பு
மகாராஷ்டிராவை தொடர்ந்து கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,25,938. கொரோனா சிகிச்சைக்குப் பின் 9,61,789 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா மரணங்கள் 4,062. நாட்டின் கொரோனா பாதிப்புகளில் 75.87% மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் இருந்துதான்.
5 மாநிலங்களில் பாதிப்பு
இதனிடையே மகாராஷ்டிராவில் ஒருநாளைய கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்தது. கடந்த 24 மணிநேரத்தில் 6,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பஞ்சாப், சத்தீஸ்கர், கேரளா, மத்திய பிரதேச மாநிலங்களிலும் திடீரென ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா மரணங்கள் எதுவும் இல்லை என பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.