கட்டுப்படுத்த முடியாத குடிமகன்கள் கூட்டம்.. மதுபானங்களுக்கு 70% கொரோனா வரி.. கெஜ்ரிவால் பகீர் முடிவு
டெல்லியில் மது பானங்களுக்கு 70% கொரோனா வரி விதிக்க அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.
டெல்லி: டெல்லியில் மது பானங்களுக்கு 70% கொரோனா வரி விதிக்க அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் மூன்றாவது லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நாடு முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிக அளவில் தளர்த்தப்பட்டுள்ளது.
மதுபானம்
இந்தியா முழுக்க பெரும்பாலான மாநிலங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து சோன்களிலும் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் டாஸ்மாக் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் திறக்கப்பட்டது.
டெல்லி நிலை
டெல்லியில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. இதனால் அங்கு மொத்தம் நேற்று 150 மதுபான கடைகள் இயங்கியது. 40 நாட்களுக்கு பின் மதுபான கடைகள் திறக்கப்பட்ட காரணத்தால் டெல்லியில் கூட்டம் அலை மோதியது. ஆயிரக்கணக்கில் மக்கள் முண்டி அடித்துக் கொண்டு மதுபானங்களை வாங்கினார்கள்.
மிக மோசம்
இதனால் டெல்லியில் மொத்தமாக சமூக இடைவெளி வீணானது. இது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில்தான் அதிரடியாக டெல்லியில் மது பானங்களுக்கு 70% கொரோனா சிறப்பு வரி விதிக்க அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் டெல்லியில் மதுபான கடைகளில் கூட்டம் குறையும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனால் டெல்லியில் மதுபானங்களின் விலை சரமாரியாக ஏற உள்ளது.
இன்று நடைமுறை
இன்று முதல் இந்த புதிய விலை நடைமுறைக்கு வருகிறது. இதை கொரோனா சிறப்பு வரி என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாநில அரசின் வருவாய் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். பொருளாதார சரிவை சரிக்கட்ட இந்த வரி விதிப்பு பெரிய அளவில் உதவும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் மது பிரியர்கள் மத்தியில் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.