மார்ச் 22 மக்கள் ஊரடங்கு நாளிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாஹின் பாக்கில் போராட்டம் தொடரும்!
டெல்லி: கொரோனாவை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கு நடைமுறையை கடைபிடிக்க அழைப்புவிடுத்திருக்கும் மார்ச் 22-ந் தேதியும் டெல்லி ஷாஹின் பாக்கில் மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேசமுமே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நாளை மறுநாள் மக்கள் ஊரடங்கு நடைமுறையை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த அழைப்புக்கு அனைத்து தரப்பும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாடு தழுவிய அளவிலான முழு அடைப்பைப் போல இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. ஆனால் அன்றைய தினமும் டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக 3 மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. சமூக ஒன்றுகூடல்களை தவிர்த்தால் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என்பதால் பல இடங்களில் ஷாஹின் பாக் பாணி சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் கைவிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்தான் நாளை மறுநாளும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஷாஹின் பாக்கில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.