21 நாள் ஊரடங்கு.. பொருளாதாரம் சீர்குலையும்.. பலி எண்ணிக்கை உயரும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்!
டெல்லி: நாடு முழுக்க சரியாக திட்டமிடாமல் அமலுக்கு வந்து இருக்கும் ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கும், மக்கள் பீதிக்கு உள்ளாவார்கள், கொரோனா காரணமாக ஏற்படும் பலிகளும் இதனால் அதிகரிக்கும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
நாடு முழுக்க 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் லாக் டவுன் உத்தரவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பொருளாதார ரீதியாக நிறைய இழப்புகளை இந்தியா இதனால் சந்திக்க துவங்கி உள்ளது . கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தினசரி வேலை பார்த்து சம்பாதிக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.
டெல்லி பணியாளர்கள்
முக்கியமாக டெல்லியில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். டெல்லியில் குடியேறி இருக்கும் பிற மாநில மக்கள் தங்கள் வேலையை இழக்கும் நிலைக்கு சென்றதால், பலர் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், உலகில் சில நாடுகளில் முழு லாக் டவுனுக்கு பதிலாக வேறு சில கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.
ராகுல் காந்தி கடிதம்
அங்கு கொரோனாவிற்கு எதிராக வேறு வகைகளில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். நாமும் அது போல் செய்ய வேண்டும். வளர்ந்த நாடுகளை போல முழு லாக் டவுன் பிறப்பிப்பதற்கு பதிலாக, வேறு விதமான செயல்பாடுகளில் நாம் இறங்க வேண்டும். நம் நாடு வித்தியாசமானது என்பதை நாம் உணர வேண்டும். நாடு முழுக்க கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும்.
தினசரி கூலிகள் அதிகம்
இந்தியாவில் தினசரி கூலியை நம்பி வாழும் மக்கள்தான் அதிகம். தினமும் வரும் சம்பளத்தை நம்பித்தான் பலர் இருக்கிறார்கள். இந்த முழு லாக் டவுன் அவர்கள் வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்கும். இந்தியா முழுக்க விதிக்கப்பட்டு இருக்கும் லாக் டவுன் காரணமாக, இழப்புகள் அதிகம் ஏற்படும், கொரோனா காரணமாக ஏற்படும் பலி எண்ணிக்கையும் இதனால் பெரிய அளவில் உயரும்.
முழு ஊரடங்கு
இந்த முழு ஊரடங்கு காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இதனால் அவர்கள் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு படை எடுக்கிறார்கள். இதனால் கிராமங்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது. கிராமங்களில் வாழும் முதியவர்களுக்கு இதனால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படும் பலி எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும்.
மக்கள் பாதிக்கிறார்கள்
கட்டுமான நிறுவனங்கள், மெட்ரோ பணிகள், தொழிற்சாலைகள், சிறு தொழில்கள், மூடப்பட்டதால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று உள்ளனர். இவர்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. இவர்கள் தினசரி ஊதியம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இவர்களுக்கு தங்குவதற்கு இடம் அளித்து உதவ வேண்டும் .
|
உதவி வேண்டும்
மக்கள் இப்படி வெளியேறுவதை, இப்படி லாக் டவுன் காரணமாக மக்கள் அச்சம் அடைவதை மத்திய அரசு உடனே போக்க வேண்டும். அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக அடுத்த சில மாதங்களுக்குப் பணம் செலுத்தி அரசு உதவ வேண்டும். இதில் மத்திய அரசு நுணுக்கமாக யோசிக்க வேண்டும். புத்திசாலித்தனமாக நாம் செயல்பட வேண்டும், என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு இருக்கிறார்.