1.30 லட்சம் இந்தியர்களை.. காவு வாங்கிய கொடூர கொரோனாவுக்கு இ,ன்று ஃபர்ஸ்ட் பர்த்டே.. விலகாத கவலை
டெல்லி: மனித இனத்திற்கே பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் உலகில் முதல் முதலாக அறியப்பட்ட தினம் இன்று தான் அதாவது கொரோனா வைரஸ்க்கு ஃபர்ஸ்ட் பர்த்டே. நவம்பர் 17ம்தேதி முதல் பிறந்த நாள். இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் 130577 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் ஹுபே மாகாணத்தில் வூகானில் 2019ம் ஆண்டு நவம்பர் 17 தேதி கண்டுபிடிக்கப்பட்டது. 55 வயது பெண்ணுக்கு சார்ஸ் வகை நோய் (SARS-CoV-2 ) பாதித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நவம்பரில் 4 ஆண்கள் மற்றும் 5 பெண்களுக்கு கொரோனா பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் முதல் நபர் 55 வயது பெண் தானா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
வூகானில் உள்ள இறைச்சி உணவு விற்பனை சந்தையில் இருந்து பரவியதாக சீன அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் தெரிவித்தனர். அந்த வைரஸ் பரவ காரணமாக இருந்த வூகான் இறைச்சி சந்தை மூடப்பட்டது. வவ்வால் மூலம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதாக ஆதாரங்கள் காட்டுகின்றன. இந்த வைரஸ் காட்டுத்தீ போல் சீனாவில் பரவிய நிலையில், அங்கிருந்து இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளுக்கு பரவியது.
மார்ச் மாத நிலவரம்
இந்தியாவில் ஜனவரி 30ம் தேதி சீனாவில் இருந்து கேரளா வந்த மருத்துவ மாணவருக்கு கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் பின்னர் முழுமையாக பரவ தொடங்கியது மார்ச் மாதத்தில் தான். மார்ச் மாதத்தில் வெறும் 500 பேருக்கு பரவி இருந்த கொரோனா பின்னாளில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல லட்சம் பேரை பாதிக்க தொடங்கியது.
7 மாதத்தில் மட்டும் 130577 பேர் பலி
இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 88லட்சத்து 74 ஆயிரத்து 918 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இதில் 82 லட்சத்து 88 ஆயிரத்து 376 பேர் குணம் அடைந்துள்ளனர். இந்த கொரோனா தொற்றால் கடந்த 7 மாதத்தில் மட்டும் 130577 பேர் பலியாகி உள்ளனர். இருப்பதிலேயே மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 46034 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் 11541 பேரும், தமிழகத்தில் 11495 பேரும், மேற்கு வங்கத்தில் 7714 பேரும் பலியாகி உள்ளனர்.
உயிரிழப்பும் அதிகம்
இந்தியாவிலேயே அதிகபட்சமாக கொரோனா தொற்றால் மகாராஷ்டிரா பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1749777 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 862804 பேருக்கும், ஆந்திராவில் 854764 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 759916 பேரும் கேரளாவில் 527709 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை நிலைக்கு சென்றது
தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது. குறிப்பாக தமிழகத்தில் மிகவேகமாக குறைந்துள்ளது. உயிரிழப்பும், பாதிப்பு எண்ணிக்கையும் ஜூலை 2வது வாரத்தில் இருந்த நிலைக்கு சென்றுள்ளது. தற்போது 29ஆயிரம் பேருக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. ஜூலை 2வது வாரத்தில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா இருந்தது. தமிழகத்திலும் ஜுலையில் இருந்த நிலையில் கொரேனா பரவல் உள்ளது.