கொரோனா.. பெண்கள், முதியவர்களுக்கு சிறப்பு உதவி தொகை.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கொரோனா பாதிப்பை தொடர்ந்து பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் கூடுதல் நிதியை அறிவித்து உள்ளது.
டெல்லி: கொரோனா பாதிப்பை தொடர்ந்து பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் பல்வேறு சிறப்பு உதவி தொகைகளை அறிவித்து உள்ளது.
Recommended Video
கொரோனா காரணமாக இந்தியாவில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் இன்று 4 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்தியா முழுக்க நேற்று முதல நாள் இரவில் இருந்து மொத்தமாக லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14ம் தேதி வரை இந்த லாக் டவுன் நீடிக்கும். இந்த லாக் டவுன் மற்றும் கொரோனா காரணமாக பாதிக்கும் மக்களுக்கு மத்திய அரசு நிதி உதவிகளை அறிவித்துள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கான நிதி உதவி விவரங்கள்,சலுகைகளை அறிவித்தார்.
அதன்படி, முதியோர், கணவரை இழந்தோருக்கான சிறப்பு நிதியுதவியாக ரூ.1000 வழங்கப்படும். அடுத்த 3 மாதங்களில் இரண்டு தவணைகளில் இந்த நிதி வழங்கப்படும். இடைத்தரகர் யாரும் இன்றி இந்த சலுகைகள் வழங்கப்படும். ஜன் தன் மகளிர் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதத்திற்கு ரூ .500 வழங்கப்படும்.
20 கோடி பலனாளிகளுக்கு இதன் மூலம் நிதி உதவி கிடைக்கும். பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ .20 லட்சம் அளவுக்கு பிணை இல்லாத கடன்கள் வழங்கப்படும். இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதம் இல்லாத கடன் 10 லட்சத்தில் இருந்து இருபது லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கு தலா ரூ.50 லட்சம் மருத்துவ காப்பீடு.. நிர்மலா சூப்பர் அறிவிப்பு
இந்த கடனால் 7 கோடி குடும்பங்களுக்கு பயன் கிடைக்கும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச கேஸ் வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக ரூ.200 வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தரப்படும் ரூ.6 ஆயிரத்தில் ரூ.2 ஆயிரம் முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்கப்படும் , என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.