சீனாவில் தவிக்கும் 300 இந்தியர்கள்.. அழைத்துவரும் பணியை தொடங்கியது மத்திய அரசு
Recommended Video
டெல்லி: கொரோனா வைரஸ் பிரச்னையால் சீனாவின் ஹூபே மாகாணத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு இதுவரை 106 பேர் இறந்ததை சீனா உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் "2019-nCoV தொடர்பான நிமோனியா" நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000 ஆக அறிவித்துள்ளது. இதில் 976 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று கூறியுள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி சீனாவில் 6,973 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், இந்தியா தனது எல்லைகளுக்குள் கொரோனா வைரஸ் நுழைவதைத் தடுக்க அனைத்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. . வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி டெல்லியின் ஆர்.எம்.எல் மருத்துவமனையில் மூன்று பேர் உட்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 12க்கும் மேற்பட்ட மக்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். கேரளாவில், 430 பேர் தங்கள் வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்கள்.
நம்பிக்கை எல்லாம் தகர்ந்தது.. ஜப்பானுக்கும் பரவிய கொரோனா.. சீனா செல்லாமலே வைரஸ் தாக்கப்பட்ட இளைஞர்!
முற்றிலும் துண்டிப்பு
இந்நிலையில் சீனாவின் வுஹான் நகரம் கொரனோ வைரஸ் உருவான மையப்பகுதியாக உள்ளது. இங்கிருந்து தான் பரவியது. இதைடுத்து வுகான் நகருடன் மற்ற நகரங்களுடனான போக்குவரத்தை சீன அரசு துண்டித்துள்ளது. அந்த நகர் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.
மாணவர்கள்
வுஹான் முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் படிக்கின்றனர்.அவர்களில் சிலர் வைரஸ் தாக்குதல் அதிகரிக்கும முன்னரே நகரத்தை விட்டு வெளியேறினர். இன்னும் அங்கு சிக்கியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 250 முதல் 300 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் அனுப்புங்க
இந்நிலையில் வுகான் நகரில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட் விவரங்களை பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வேலைக்கான காரணங்களுக்காக சீன அதிகாரிகளிடம் முன்னதாக தங்கள் பாஸ்போர்ட்டை சமர்ப்பித்தவர்கள் சமர்ப்பித்த தேதியுடன் ஆவணத்தை யாருக்கு ஒப்படைத்தார்கள் என்ற தகவலை வழங்க வேண்டும். விவரங்கள் WeChat ID sondhi_0808 இல் உள்ள தூதரக அதிகாரிக்கு அனுப்பப்பட உள்ளன.
அழைத்து வர முடிவு
இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்னையால் சீனாவின் ஹூபே மாகாணத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. இதற்காக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது, இந்த விஷயத்தில் சீன அதிகாரிகள் மற்றும் நமது நாட்டினருடன் தொடர்பில் உள்ளார்கள். நாங்கள் தொடர்ந்து புதிய தகவல்களை பகிர்ந்து கொள்வோம்" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் ட்வீட் செய்துள்ளார்.