எது நடக்க கூடாது என்று பயந்தோமோ, அது நடந்துவிட்டதா.. 3வது ஸ்டேஜில் இந்தியா? ஐசிஎம்ஆர் ரிப்போர்ட்
டெல்லி: இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய இரண்டாவது ரேண்டம் பரிசோதனை முடிவில் இந்தியாவில் சமூக பரவல் என்ற கட்டத்தை கொரோனா வைரஸ் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
முதல் கட்ட சோதனைகள் நடந்தபோது இவ்வாறு நோய் தாக்கம் அதிகம் பரவவில்லை என்ற ஒரு கருத்தை ஐசிஎம்ஆர் கூறியிருந்தது. இந்த நிலையில் இரண்டாவது ரேண்டம் சோதனையை அது நடத்தியுள்ளது.
பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை 5911 எஸ்.ஏ.ஆர்.ஐ (கடுமையான சுவாச நோய்கள்) நோயாளிகளிடம் கொரோனா சோதனைகளை நடத்தியுள்ளது. இந்த சோதனை முடிவுகளில் தான் ஒரு முக்கியமான விஷயம் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் எப்படி தாக்கியது? கர்நாடகா அதிகாரிகளை விழிபிதுங்க வைக்கும் புதிய சிக்கல்
52 மாவட்டங்கள்
சோதனைக்கு உள்ளாக்கப் பட்டவர்களில் 104 பேருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 1.8 சதவீதம் ஆகும். மொத்தம் 20 மாநிலங்களில் 52 மாவட்டங்களில் இந்த சோதனை பரவலாக நடத்தப்பட்டுள்ளது. இது குறைந்த அளவு தானே என்று நினைக்கக்கூடும். ஆனால் விஷயம் அது கிடையாது.
வெளிநாடு போகவில்லை
104 பேருக்கு பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது அல்லவா, அதில் 40 பேர், அதாவது நோய் பாதித்தவர்கள் 39.2 சதவீதம் பேர் இதுவரை வெளிநாடு சென்று வந்ததில்லை. எந்த ஒரு வெளிநாடு சென்று வந்த நபருடனும், அவர்களுக்கு நேரடி தொடர்பும் கிடையாது. அப்படி இருந்தும், இத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 மாநிலங்களில் 36 மாவட்டங்களில் இவ்வாறு நேரடித் தொடர்பு இல்லாமல், வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்கிறது அந்த புள்ளிவிபரம்.
தமிழகம்
15 இந்திய மாநிலங்களில் கடுமையான சுவாச நோய்கள் பாதிப்பு இருப்பவர்களில் 1 சதவீதம் பேருக்காவது, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதுகுறித்த புள்ளிவிவரத்தை பார்க்கலாம்:
குஜராத்: 792 எஸ்.ஏ.ஆர்.ஐ நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டனர், 13 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது (1.6%)
தமிழ்நாடு: 577 எஸ்.ஏ.ஆர்.ஐ நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டனர், 5 பேருக்கு (0.9%) கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா: 553 எஸ்.ஏ.ஆர்.ஐ நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டனர், 21 பேருக்கு (3.8%) உறுதி செய்யப்பட்டது.
கேரளா: எஸ்.ஏ.ஆர்.ஐ நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டனர், அதில் ஒருவருக்கு (0.2%) மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கண்டெய்ன்மென்ட்
இதுகுறித்து ஐசிஎம்ஆர் தனது பரிந்துரையில் இந்த மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். கண்டைன்மெண்ட் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐசிஎம்ஆர் நடத்திய முதல்கட்ட சோதனையின்போது எஸ்ஏஆர்ஐ நோயாளிகள் ஒருவருக்குக்கூட, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆண்கள்
தற்போது வெளியாகியுள்ள இந்த அறிக்கையில் மற்றொரு அம்சமும் கவனிக்கத்தக்கது. பெரும்பாலான நோயாளிகள் ஆண்களாக இருக்கிறார்கள் என்பதும் அவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டோர்களாக இருக்கிறார்கள் என்பதும் இதில் தெரியவந்துள்ள உண்மையாகும். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தவர்களில் 85 நபர்கள் அதாவது சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதில் 83.3% நபர்கள் ஆண்கள்தான் 81.4 சதவீதம் பேர் 40 வயதுக்கு மேற்பட்டோர்.
மூன்றாவது ஸ்டேஜ்
எனவே அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இலக்காக கொண்டு துரித நடவடிக்கைகளை எடுத்து இந்த பிரச்சனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பது ஐசிஎம்ஆர் பரிந்துரையாகும். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்தியாவில் சமூக பரவல் என்ற மூன்றாவது ஸ்டேஜ் வரவில்லை என்று ஐசிஎம்ஆர் கூறியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ஆய்வறிக்கை மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.