கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கையில் 2ம் இடத்தில் தமிழகம்; நோயாளிகள் எண்ணிக்கையில் 4-வது இடம்
டெல்லி: நாட்டில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது; கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் ஜூலை 30-ந் தேதி வரையில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மத்திய அரசு விரிவான விவரங்களுடன் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள்:
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 15,83,792. இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 10,20,582.
இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 34,968. இந்தியாவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 5,28,242.
ஆக31 வரை லாக்டவுன் நீட்டிப்பு- கட்டுப்பாடுகள், தளர்வுகள் எவை? முதல்வரின் விரிவான அறிவிப்பு
மகாராஷ்டிராவில் பாதிப்பு- குணமடைந்தோர் எண்ணிக்கை
நாட்டில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,00,651. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2,39,755. மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,463. தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 1,46,433.
குணமடைந்தோர் எண்ணிக்கையில் 2-வது இடத்தில் தமிழகம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் நாட்டிலேயே தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,34,114. இதில் 1,72,883 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,741. தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுகிற நோயாளிகள்- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 57,490 மட்டும். இது இந்திய அளவில் 4-வது இடம்.
கர்நாடகா 2-வது இடம்
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற- ஆக்டிவ் கேஸ்களில் கர்நாடகா 2-வது இடத்தில் உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 1,12,504 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 42,901 பேர் குணமடைந்தனர். 2,147 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தற்போது 67,456 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திராவுக்கு 3-வது இடம்
ஆக்டிவ் கேஸ்களில் இந்திய அளவில் 3-வது இடத்தில் ஆந்திரா உள்ளது. ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,20,390. இங்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 55,406. ஆந்திராவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,213. ஆந்திராவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 63,771 ஆகும்.
உயிரிழப்பு இல்லாத மிசோரம்
நாட்டின் இதர மாநிலங்களில் ஆக்டிவ் கேஸ்கள் 29 ஆயிரத்துக்கும் கீழே உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 29,997 அதிகபட்சமாகும். நாட்டிலேயே குறைந்தபட்ச ஆக்டிவ் கேஸ் மிசோரத்தில்தான். இங்கு மொத்தமே 183 பேர்தான் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மிசோரமில் ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.