மோடியையே பெல்ஜியம் போக விடாமல் இடையூறு செய்துவிட்டதே கொரோனா.. ஒத்திப்போகிறது உச்சிமாநாடு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிரஸ்ஸல்ஸ் பயணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
Recommended Video
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு இந்த ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி பெல்ஜியம் நாட்டின், பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று வெளியுறவுத்துறை, செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், நிருபர்களிடம் இதை உறுதி செய்தார்.
கொரோனா வைரஸ் (கோவிட் -19) பாதிப்பால், இந்திய-ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் ஒருவருக்கொருவர் அடுத்த நாடுகளில் பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த உச்சிமாநாடு பரஸ்பர வசதியான தேதிக்கு மாற்றியமைக்கப்படும். இந்த தேதி, இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
பிரஸ்ஸல்ஸில் 10 புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பெல்ஜியத்தில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை- சிக்கிமில் பிற மாநிலத்தவர் நுழைய தடை- இன்னர் லைன் பெர்மிட் ரத்து
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, அவர்கள் உலக சுகாதாரத்திற்கான கவலைகளையும் அர்ப்பணிப்பையும் பகிர்ந்து கொள்கின்றனர், மேலும் பாதிப்பு விரைவில் சீரடையும் என்று நம்புகின்றனர் என்று ரவீஷ் குமார் தெரிவித்தார்.
அதேநேரம், பிரதமர் மோடியின் வங்கதேச பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அதன் விவரங்கள் பின்னர் பகிரப்படும் என்றும் ரவீஷ் குமார் கூறினார்.