கனிகா கபூர்.. ஒரே பெண்ணால் குடியரசுத் தலைவர் முதல் எம்பிக்கள் வரை.. கொரோனா அச்சம்.. என்ன நடந்தது?
பாலிவுட் பாடகி கனிகா கபூர் மூலம் இந்தியாவில் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
டெல்லி: பாலிவுட் பாடகி கனிகா கபூர் மூலம் இந்தியாவில் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கனிகா கபூருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது, அவர் எப்படி மற்றவர்களுக்கு பரவ காரணமாக இருந்தார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
பாலிவுட்டை சேர்ந்த கனிகா கபூர் மும்பையில் வசித்து வருகிறார். இவர் பாலிவுட்டில் பெரிய பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோதான் இவரின் சொந்த ஊர்.
கடந்த பிப்ரவரி மாதம் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இவர் லண்டன் சென்றுள்ளார். அதன்பின் மார்ச் மாதம் 9ம் தேதி இவர் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ளார்.
கொரோனா: தனிமைப்படுத்தலுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார் பாஜக எம்பி துஷ்யந்த் சிங்!
மும்பை விமான நிலையம்
மும்பை விமான நிலையத்திற்கு வந்த இவர் அங்கு சோதனையில் இருந்து எஸ்கேப் ஆகி வெளியே சென்றுள்ளார். அங்கு அவருக்கு சோதனை செய்யப்படவில்லை. அதன்பின் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மார்ச் 11ம் தேதி லக்னோ சென்றுள்ளார். இந்த பயணம் எதிலும் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்படவில்லை. மார்ச் 16ம் தேதிதான் இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட தொடங்கி இருக்கிறது.
என்ன செய்தார்
இதன்பின் லக்னோவில் உள்ள KGMU மருத்துவமனையில் இவருக்கு சோதனை நடந்தது. அதில் கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது, அட இதில் என்ன இருக்கிறது, ஒரு பாடகிக்கு கொரோனா உள்ளது. இதில் என்ன சிக்கல் என்று கேட்கலாம். இவர் கலந்து கொண்ட ஒரு பார்டிதான் இந்த பிரச்சனைக்கு காரணம். மார்ச் 15ம் தேதி இவர் லக்னோவில் ஒரு பார்டியில் கலந்து கொண்டு இருக்கிறார்.
100 பேர்
இந்த விழாவில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். தனக்கு கொரோனா இருப்பது தெரியாமல் அப்படியே அதே வைரஸோடு இவர் பார்டியில் கலந்துகொண்டு இருக்கிறார். இதில் பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே, அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்தும் பங்கேற்று இருக்கிறார். இதுதான் தற்போது பிரச்சனை ஆகி உள்ளது. கனிகா கபூர் மூலம் இவர்களுக்கு கொரோன பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
எத்தனை பேர் சந்தித்தார்
கனிகா கபூர் கலந்து கொண்ட இந்த விழாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன் கலந்து கொண்டு இருக்கிறார். அதன்பின் இவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலரை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜக எம்பி அனுபிரியா பட்டேல் கனிகா உடன் இந்த விழாவில் மிகவும் நெருக்கமாக இருந்து உள்ளார். இவர்களுக்கு எல்லாம் இந்த வைரஸ் பரவி இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
வைரஸ் எப்படி
இதில் இன்னொரு விஷயம் இந்த மூன்று எம்பிக்களும், இந்த பார்ட்டிக்கு பின் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள், அங்கு பல்வேறு எம்பிக்கள், பாஜக தலைவர்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக வசுந்தரா ராஜே மகன் எம்பி துஷ்யந்த் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து இருக்கிறார். அவருடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்.
சோதனை
இதனால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நேற்று இரவோடு இரவாக கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது. இதற்கான முடிவு இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் பாஜக எம்பிக்கள் பலர் வெளியே வராமல் இதனால் முடங்கி உள்ளனர். வசுந்தரா ராஜேவும், அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்த் தங்களை தனிமை படுத்துக்கொண்டு உள்ளனர். பல அரசியல் தலைவர்கள் இதனால் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர்.