"க்ளஸ்டர்".. பல்லாயிரம் பேர்.. சங்கிலி தொடர் போல பரவிய கொரோனா.. நிஜாமுதீன் ஜமாத்தில் என்ன நடந்தது?
டெல்லியில் டாப்லிகி ஜமாத் (Tablighi Jamaat) கூட்டத்தின் மூலம் பலருக்கு கொரோனா வைரஸ் பரவியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி: டெல்லியில் டாப்லிகி ஜமாத் (Tablighi Jamaat) கூட்டத்தின் மூலம் பலருக்கு கொரோனா வைரஸ் பரவியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்தியா முழுக்க பலருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
டெல்லியில் மார்ச் 8ம் தேதி அந்த கூட்டம் தொடங்கியது. மத அமைப்பான டாப்லிகி ஜமாத் மூலம் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. மக்கள் இடையே மத ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டம் டெல்லியில் வருடா வருடம் நடக்கும்.
டெல்லி மேற்கு நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஒரு வழிபாட்டு தலத்தில்தான் இந்த கூட்டம் நடந்தது. மார்ச் 15ம் தேதி இரவு வரை இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டம்தான் தற்போது சிக்கலாகி உள்ளது.
கூட்டம் நடந்தது
இந்த கூட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சென்றனர். இந்தியா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று தெற்காசிய நாடுகளில் இருந்து பலர் வந்து இருந்தனர். மிகவும் பிரம்மாண்டமாக நடக்கும் மத கூட்டம் ஆகும் இது. தமிழகம், தெலுங்கானா, மேற்கு வங்கம், கேரளா, ஆந்திர பிரதேசம் ஆகிய பல மாநிலங்களில் இருந்து மக்கள் இங்கே சென்று இருக்கிறார்கள்.
சிலருக்கு கொரோனா
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் நேற்று மட்டும் டெல்லியில் 20 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 6 பேர் பலியானார்கள். இவர்கள் 6 பேரும் இந்த கூட்டத்திற்கு சென்று திரும்பியவர்கள். இந்த கூட்டத்திற்கு சென்றவர்களில் 10 பேர் இந்தியா முழுக்க பலியாகி உள்ளனர். இதில் 9 பேர் இந்தியர்கள். இதுமட்டுமின்றி நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மூலம் கொரோனா பரவி உள்ளது.
முதல் நபர் மூலம் பரவி இருக்கலாம்
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஒரு நபர் மூலம் பலருக்கு வரிசையாக கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த குழுவின் ''பேஷண்ட் ஸீரோ'' , அதாவது முதல் நபர் யார்? அவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. பெரும்பாலும் தாய்லாந்தில் இருந்து இந்த கூட்டத்திற்கு வந்தவருக்கு இந்த வைரஸ் இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
எத்தனை பேர் கலந்து கொண்டனர்
இந்த ஜமாத் கூட்டம் மொத்தம் 8 நாட்கள் நடந்துள்ளது. தினமும் ஆயிரம் பேர் வரை இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதிகபட்சம் இதில் 8500 பேர் வரை கலந்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிகமாக ஆந்திர பிரதேசம், தெலுங்கனா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து இதில் பலர் கலந்து கொண்டு இருக்கலாம் என்கிறார்கள். தமிழகத்தில் இருந்து மட்டும் 1500 பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
பல பகுதிகளுக்கு சென்றனர்
இந்த கூட்டம் இதோடு முடியவில்லை. இவர்கள் எல்லோரும் ஊர் திரும்பும் போது பேருந்து, ரயில், விமானம் என்று பொது மக்கள் உடன் பயணம் செய்து உள்ளனர். அவர்களுக்கும் இவர்கள் மூலம் கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் இவர்கள் எல்லோருடனும் ஒரு தாய்லாந்து பயணியும், வெளிநாட்டு மத போதகர்களும் வந்துள்ளனர். நாடு முழுக்க வேறு வேறு இடங்களில் கூட்டம் நடத்துவதற்காக இப்படி பயணம் செய்துள்ளனர்.
வேகமாக பரவி வருகிறது
இவர்கள் மூலம் நாடு முழுக்க பலருக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்டுகிறது. இவர்கள் தொடர்பு கொண்ட நபர்கள், இவர்கள் சென்ற பகுதிகள், இவர்கள் உடன் பயணம் செய்தவர்கள் எல்லோரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, தேடப்பட்டு வருகிறார்கள். இவர்கள் காண்டாக்ட் மொத்தத்தையும் டிரேஸ் செய்து வருகிறார்கள். இது பெரும்பாலும் க்ளஸ்டர் பரவலாக இருக்கும், ஆனால் இது ஸ்டேஜ் 3யை இது ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்கள்.
க்ளஸ்டர் பரவல் என்றால் என்ன
க்ளஸ்டர் பரவல் என்பது ஸ்டேஜ் 2க்கும் ஸ்டேஜ் 3க்கும் இடையில் இருக்கும் பரவல் ஆகும். அதாவது லோக்கல் பரவல் மற்றும் கம்யூனிட்டி பரவல் இரண்டுக்கும் இடையில் இருக்கும் பரவல் ஆகும். 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் என்பது, வெளிநாட்டில் இருந்து ஒரு நபர் இந்தியா வந்து, அவர் மூலம் அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொரோனா பரவி. அந்த நண்பர்கள் மூலம் வேறு சில உறவினர்களுக்கு கொரோனா பரவினால் அது 'க்ளஸ்டர்' (Cluster) பரவல். ஒருவர் மூலம் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமின்றி தூரத்து உறவினர்களுக்கு கூட கொரோனா பரப்பினால் இப்படி கூறலாம்.
பலருக்கு பரவும்
இப்படி 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் மூலம் ஒரே குடும்பத்தில், வீட்டில் பலருக்கு கொரோனா பரவும். இதனால் வேகமாக பலர் உடனே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் என்பது ஸ்டேஜ் 3 ன் முதல்படி ஆகும். 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் வந்தால் விரைவில் ஸ்டேஜ் 3 பரவல் ஏற்படும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. இதனால்தான் இந்த டெல்லி மீட்டிங் அதிக கவனம் பெறுகிறது.
தமிழகத்தில் எங்கே எல்லாம் மீட்டிங்
தமிழகத்தில் இருந்து இந்த மீட்டிங்கிற்கு 1500 பேர் வரை கலந்து கொண்டார்கள் என்று கூறப்படுகிறது. இதில் 998 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஏற்கனவே ஈரோட்டில் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இவர்கள் எல்லோரும் அந்த மீட்டிங்கிற்கு சென்றவர்கள் அல்லது மீட்டிங் சென்றவர்களோடு தொடர்பு கொண்டார்கள். நேற்று தமிழகத்தில் கொரோனா தாக்கிய 17 பேரில் 10 பேர் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டவர்கள்.
வேறு மாவட்டங்கள் என்ன
அதேபோல் கோவையில் இந்த மீட்டிங் சென்று வந்த 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.சேலத்தில் 4 பேருக்கு இந்த மீட்டிங் சென்றதால் கொரோனா ஏற்பட்டுள்ளது. இது போக மதுரையில் பலியான நபர், இந்த தாய்லாந்து நபர்களை சந்தித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் இவர்கள் சென்னை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, கோவையில் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு இருந்துள்ளனர்.
தென் கொரியா சம்பவம்
தென்கொரியாவில் இதேபோல் மத கூட்டம் ஒன்றின் மூலம்தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. தென்கொரியாவில் ஷின்சேன்ஜி என்ற மத அமைப்பு உள்ளது. இந்த ஷின்சேன்ஜி வழிபாட்டு கூட்டம் கடந்த பிப்ரவரி நடந்தது. இதில் 9000 பேர் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில் 9000 பேர் ஒன்றாக வழிபாடு செய்தனர். இதில் 4000 பேருக்கு தற்போது கொரோனா தாக்கி இருக்கிறது.
இது எப்படி க்ளஸ்டர் பரவல்
இவர்களிடம் இருந்து எல்லோருக்கும் வைரஸ் பரவியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத பலருக்கும்,கலந்து கொண்ட நபர்கள் மூலம் இந்த வைரஸ் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே தான் தற்போது இந்தியாவில் நடந்துள்ளது. இந்த கூட்டம் குறித்தும், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் குறித்தும் மத்திய அரசு தீவிரமாக விசாரித்து வருகிறது.