மே 3ம் தேதிவரை.. ரயில் போக்குவரத்து, உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து
டெல்லி: மே 3ம் தேதிவரை, நாடு முழுக்க பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே அறிவித்துள்ளது. விமானங்களும் மே 3ம் தேதி நள்ளிரவு வரை ரத்து செய்யப்படுகின்றன.
Recommended Video
நாடு தழுவிய லாக்டவுனின் ஒரு பகுதியாக, மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை அனைத்து பயணிகள், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளையும் ரயில்வே நிறுத்தி வைத்தது. நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, சரக்கு மற்றும் சிறப்பு பார்சல் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், லாக்டவுன் விலக்கி கொள்ளப்பட்டு நாளை முதல் இயல்பு நிலை திரும்பும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது, லாக்டவுனை மே 3ம் தேதிவரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில், ரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மே 3ம் தேதிவரை அனைத்து வகையான, பயணிகள் ரயில்வே சேவைகளையும் சஸ்பென்ட் செய்வதாக அறிவித்துள்ளது.
இதேபோல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. மே 3ம் தேதி நள்ளிரவு வரை விமான சேவைகள் மீண்டும் துவங்காது.
பல விமானங்களும், சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற முக்கிய நகர விமான நிலையங்களில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை அப்படியே நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது.
ஹாட்ஸ்பாட்கள்தான் முக்கியம்.. கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்போம்.. பிரதமர் மோடியின் அதிரடி திட்டம்!
ஏற்கனவே மாநில அரசுகள், பஸ் போக்குவரத்தை இயக்காத நிலையில், ரயில் சேவைகளும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவைகளுக்கு சொந்த வாகனங்களை மட்டுமே நம்பியிருக்கும் சூழ்நிலை உள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல விரும்புவோர், பாஸ்களை பெற்றுக்கொண்டுதான் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.