90 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சரிவு.. மீண்டு வர திட்டங்களை வகுக்கிறோம்.. ஆர்பிஐ ஆளுநர் பேட்டி!
90 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சரிவை நாம் சந்திக்க போகிறோம், மிகப்பெரிய சோதனையை மனித சமுதாயம் சந்தித்து வருகிறது என்று ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லி: 90 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சரிவை நாம் சந்திக்க போகிறோம், மிகப்பெரிய சோதனையை மனித சமுதாயம் சந்தித்து வருகிறது என்று ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
உலகமே கொரோனா காரணமாக ஸ்தம்பிக்கும் நிலையை அடைந்துள்ளது. கொரோனா தாக்குதலால் உலக நாடுகள் எல்லாம் பெரும் பொருளாதார சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க மொத்தம் 2,183,452 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுக்க கொரோனா காரணமாக 180 நாடுகள் வரை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலும் கொரோனா காரணமாக பெரிய அளவில் பொருளாதார சரிவு ஏற்படும் என்று கூறுகிறார்கள்.
மிகப்பெரிய பொருளாதார சரிவு
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட போகும் பொருளாதார சரிவு குறித்து பேசிய ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்து இருக்கிறார். அதில், உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால் ஆகும். 90 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கிரேட் டிப்ரஷன் எனப்படும் பொருளாதார சரிவை விட இது மிக மோசமான சரிவாக இருக்கும்.
தயாராக இருக்க வேண்டும்
இதற்கு நாம் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்கள் சில இதனால் இழப்புகளை சந்திக்க தொடங்கி உள்ளனர். வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது. இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன. கொரோனா காலத்திலும் பணியாற்றி வரும் பல்வேறு துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
திட்டங்களை தீட்ட வேண்டும்
பொருளாதார சரிவை மீட்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது. உலகம் முழுவதுமே பொருளாதார வளர்ச்சி குறைந்தே இருக்கிறது. ஜி20 நாடுகளில் இந்தியாவில் மட்டுமே பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும். மிகப்பெரிய சோதனையை மனித சமுதாயம் சந்தித்து வருகிறது.
தயார் நிலையில் உள்ளோம்
கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ முழுமையாக தயாராக உள்ளது. உலகளவில் பொருளாதார நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது, என்று ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா இதே கருத்தை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.அதில், நாம் இப்போது மிக மோசமான மந்த நிலையில் இருக்கிறோம்.
இதே எச்சரிக்கை
2009ல் உலகம் முழுக்க நிலவிய பொருளாதார சீர்குழைவை விட மோசமான மந்த நிலை இது. உலகம் முழுக்க ஏழை நாடுகள், வளரும் நாடுகள் இதனால் மோசமாக பாதிக்கப்படும்.கிரேட் டிப்ரஷன் என்று அழைக்கப்பட்ட 1930 பொருளாதார சரிவை விட மோசமான பொருளாதார சரிவை நாம் சந்திக்க போகிறோம். உலகில் முக்கியமான வறுமையான நாடுகள் மிக மோசமான பாதிப்பை சந்திக்க போகிறது. உலகம் முழுக்க இந்த பொருளாதார தேவைகளை குணப்படுத்த குறைந்தது 2.5 டிரில்லியன் டாலர் தற்போது தேவை, என்று அவர் குறிப்ப்பிட்டு இருந்தார்.