ஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது.. 5 நாள்களில் தீவிரம் அடையும்.. 'டாஸ்க்-போர்ஸ்' ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை!
இந்தியாவில் கொரோனா பரவலின் ஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது என்று கொரோனாவிற்கு எதிரான பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரிதர் ஞானி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலின் ஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது என்று கொரோனாவிற்கு எதிரான பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரிதர் ஞானி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வேகம் எடுத்துள்ளது. வரும் நாட்களில் இதன் தீவிரம் இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 906 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
அதிகமாக கேரளாவில் 176 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 162 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. மொத்தம் 21 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.. அச்சம் வேண்டாம்.. கலெக்டர் அறிவிப்பு
யார் இவர் ?
டாக்டர் கிரிதர் ஞானி இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான செயல்பாட்டில் முக்கியமான பங்கு வகிக்கிறார். ஹெல்த்கேர் ப்ரோவைடர் சங்கத்தின் நிறுவனரான இவர், தற்போது கொரோனாவிற்கு எதிரான பணிக்குழு ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். நிதி ஆயோக் மூலம் இந்த பணிக்குழு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வந்த இவர் தற்போது கொரோனா தடுப்பில் களமிறங்கி பணியாற்றி வருகிறார்.
இந்தியாவின் நிலைமை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து 'தி க்யுண்ட்' செய்தி நிறுவனத்திற்கு இவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் ஸ்டேஜ் 3 பரவல் தொடங்கிவிட்டது. இதை அரசு ஸ்டேஜ் 3 என்று அழைக்கவில்லை என்றாலும் கூட, நாம் ஸ்டேஜ் 3க்குள் நுழைந்துவிட்டோம் என்பதுதான் உண்மை. வரும் நாட்களில் இந்தியாவில் அதிக கேஸ்கள் வரலாம். நமக்கு போதிய நேரம் இல்லை. நம்மிடம் போதுமான பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இதற்காக இல்லை.
அடுத்த ஐந்து நாட்கள்
அடுத்த 5 நாட்கள் அல்லது 10 நாட்களில் இந்தியாவில் நிறைய பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இப்போது அறிகுறி இல்லாத நபர்களுக்கு வரும் நாட்களில் அறிகுறி தென்பட வாய்ப்புள்ளது. இதனால் திடீர் என்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு இப்போதும் கூட இருமல், மூச்சு அடைப்பு, காய்ச்சல் உள்ளவர்களை மட்டும்தான் சோதனை செய்கிறது. இதை மாற்ற வேண்டும்.
பயிற்சி முக்கியம்
இந்த அறிகுறிகள் இல்லையென்றால் அவர்களுக்கு சோதனைகள் செய்யப்படுவது இல்லை. இதை மாற்ற வேண்டும். அதிக அளவில் சோதனைகளை செய்ய வேண்டும். சோதனைகளை அதிக அளவில் செய்து, மக்களை தனிமைப்படுத்த வேண்டும். இதுதான் இப்போது முக்கியம். அதேபோல் கொரோனாவிற்கு எதிராக மருத்துவமனைகளை தயார் செய்ய வேண்டும். 3 கோடி பேர் இருக்கும் இடத்தில் குறைந்தது 3 ஆயிரம் பெட்களை தயார் செய்ய வேண்டும்.
பெட்களை தயார் செய்ய வேண்டும்
முதலில் இதற்காக மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் எல்லோரையும் பயிற்சி அளிக்க வேண்டும். அதேபோல் சில மருத்துவ கல்லூரிகளின் விடுதிகளை காலி செய்துவிட்டு, அதை மருத்துவமனைகளாக மாற்ற வேண்டும். இதற்காக மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களையும் தயார் செய்ய வேண்டும். அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணம் அடைந்தவர்கள், அறிகுறி உள்ளவர்கள் எல்லோரையும் தனி தனியாக வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும், என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
எத்தனை வகை பரவல்
கொரோனா பரவல் மொத்தம் 4 வகைப்படும்..
ஸ்டேஜ் 1 என்பது வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஒருவர் கொரோனா பாதிப்போடு வருவது.
ஸ்டேஜ் 2 என்பது கொரோனாவோடு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர், தனது வீட்டில் இருக்கும் உறவினர்களுக்கு வைரஸை பரப்புவது. இது லோக்கல் டிரான்ஸ்மிஷன்.
ஸ்டேஜ் 3 என்பது அந்த வெளிநாட்டு நபர் மூலம் அவரின் ஊரில் இருக்கும் நபர்கள், அப்படியே வெளி ஊரில் இருக்கும் நபர்கள் என்று வரிசையாக பலருக்கு கொரோனா பரவுவது. இது கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன். இதை கட்டுப்படுத்த முடியாது.
ஸ்டேஜ் 4 என்பது இந்த கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன் பலருக்கு பரவி, யாருக்கு முதலில் தோன்றியது, எப்படி பரவியது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பல ஆயிரம் பேருக்கு பரவுவது. இது பென்டாமிக் (pandemic) டிரான்ஸ்மிஷன்.