இந்தியாவில் 24 மணிநேரத்தில் 7,466 பேருக்கு கொரோனா பாதிப்பு- உலக நாடுகளில் 9-வது இடம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,466 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் தற்போது இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்க 60 லட்சத்தை நெருங்கியுள்ளது. தற்போதைய நிலையில் உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு 59,05,846 ஆகும்.
உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,62,024 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் 2, 3-வது இடங்களில் இருக்கின்றன.
சீனாவை முந்திய பலி எண்ணிக்கை.. 8 நாளில் கொரோனா செம வேகம்.. இந்தியாவில் மறுபடி முழு ஊரடங்குதான் வழி?
9-வது இடத்தில் இந்தியா
கொரோனா பாதிப்பில் 10-வது இடத்தில் இந்தியா இருந்து வந்தது. தற்போது 9-வது இடத்துக்கு இந்தியா நகர்ந்திருக்கிறது. இந்தியாவில் ஒரே நாளில் 7,466 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1,65,799 ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 24 மணிநேரத்தில் 175 பேர் மரணித்துள்ளனர்.
கொரோனா மரணங்கள்
இதனையடுத்து இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,706 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு பொது போக்குவரத்துகள் மெல்ல தொடங்கப்படும் நிலையில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிராவில்தான் மிக மோசமான பாதிப்பு உள்ளது.
தமிழகம் 2-வது இடம்
மகாராஷ்டிராவில் கொரோனாவால் மொத்தம் 59,546 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 2வது இடத்தில் தமிழம் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 19,372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3-வது இடத்தில் குஜராத் இருந்து வந்தது. தற்போது டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 16,281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத், ராஜஸ்தான்
குஜராத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,572 ஆக உள்ளது. கொரோனா மரணங்களில் குஜராத்தில் எண்ணிக்கை ஆயிரத்தை தொட உள்ளது. குஜராத்தில் மொத்தம் 960 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்துள்ளது.