இந்தியாவில் கிடுகிடுவென உயர்வு.. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்பு
டெல்லி: கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து 176 ஆக உயர்ந்துள்ளது. தெலுங்கானாவில் இந்தோனேஷியாவில் இருந்து வந்த 7 பேர் உள்பட 8 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஜம்மு காஷ்மீரில் ஒருவருக்கும், சண்டிகரில் ஒரு பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒற்றை இலக்கத்தில் இருந்த பரவும் வேகம் இப்போது இரட்டை இலக்கத்திற்கு மாறி உள்ளது.
நேற்று முன்தினம் 136 ஆக இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று மதியத்திற்குள் 42 உயர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.
தெலுங்கானாவில் புதிதாக 8 பேருக்கு கொரோனா.. டெல்லியில் இருந்து ரயிலில் வந்ததால் அச்சம்
உடல் பிரச்சனைகள்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கர்நாடகா மாநிலம் கலாபுராகியில் 76 வயது முதியவர் ஒருவரும், டெல்லியைச் சேர்ந்த 68வயது பெண் ஒருவரும், மும்பையைச் சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மூன்று பேருக்கும் ஏற்கனவே உடல் ரீதியாக பிரச்னைகள் இருந்துள்ளது. அத்துடன் கொரோனாவும் தாக்கியதால் உயிரிழந்துள்ளார்கள்.
45 பேருக்கு பாதிப்பு
நாட்டிலேயே அதிகபட்சமாக. மகாராஷ்டிராவில் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு பெண் உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் மகாராஷ்டிராவில் 45 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் தான் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக கேரளாவில் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
ஒருவர் தற்கொலை
உத்தரப்பிரதேசத்தில் 16 பேரும் கர்நாடகாவில் 11 பேரும் கொரோனா தாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். டெல்லியில் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறியுடன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் இதுவரை 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் அதில் ஒருவரான காஞ்சிபுரம் என்ஜினியர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஒரே நாளில் 8 பேர்
ஹரியானாவில் 17 பேருக்கும் உத்தரகாண்ட், லடாக், ஆந்திரா, பஞ்சாப், மேற்கு வங்கம், புதுச்சேரி (மாஹி) உள்பட 17 மாநிலங்களில் கொரோனா பரவி இருந்தது. இந்நிலையில் இந்தோனேஷியாவில் இருந்து தெலுங்கானா வந்த 7 பேர் உள்பட 8 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தெலுங்கானாவில் 5 ஆக இருந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்து 13 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் ஜம்மு காஷ்மீரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சண்டிகரில் 22 வயது இளம் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் அண்மையில் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பியவர் ஆவார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இதேபோல் மகாராஷ்டிராவில் புதிதாக இரண்டு பெண்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக இரண்டு நாளைக்குள் கொரோனா பாதிப்பு 42 பேருக்கு அதிகரித்து இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 176 ஆக உயர்ந்துள்ளது.