31 நாடுகள், 149 விமானங்கள்.. தயாராகும் 2ம் கட்ட ஆக்சன்.. மீட்கப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்!
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இரண்டாம் கட்ட மீட்பு பணிகள் மத்திய அரசால் தொடங்கப்பட உள்ளது.
டெல்லி: வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இரண்டாம் கட்ட மீட்பு பணிகள் மத்திய அரசால் தொடங்கப்பட உள்ளது.
கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வரும் முடிவில் மத்திய அரசு களமிறங்கி உள்ளது.இதற்காக வந்தே பாரத் மிஷன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது . இதற்காக பெரிய அளவில் மீட்பு பணி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்ட மீட்பு பணிகள் கடந்த மே 7ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் இதன் இரண்டாம் கட்ட மீட்பு பணிகள் தற்போது தொடங்க உள்ளது.
தமிழ்நாடு வைத்த ஸ்பெஷல் கோரிக்கை.. தயாரானது "எக்சிட் பிளான்".. லாக்டவுன் 4.0 எப்படி இருக்கும்?
மீட்பு பணிகள்
மொத்தமாக இந்த பல கட்ட மீட்பு பணிகள் மூலம் 19 லட்சம் இந்தியர்களை மீட்க இந்த திட்டம் போடப்பட்டுள்ளது. இதில் விமானம் மூலம் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் மீட்கப்பட உள்ளனர். முதல் கட்டத்தில் 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர். முதல் கட்டத்தில் 12 நாடுகளில் இருந்து மட்டும் இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அதிகமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பலர் மீட்கப்பட உள்ளனர்.ஈரான், சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் பலர் சிக்கி தவிக்கிறார்கள்.
இரண்டாம் கட்ட பணிகள்
இதன் இரண்டாம் கட்ட பணிகள் வரும் மே 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த முறை கூடுதலாக 19 நாடுகள் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த முறை 31 நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட உள்ளனர். இதற்காக மொத்தம் 149 விமானங்கள் இயக்கப்பட உள்ளது. இதுவரை 1.88 லட்சம் பேர் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று பதிவு செய்துள்ளனர்.
நாடுகளின் லிஸ்ட்
அதன்படி இந்தோனேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து , கனடா, ஜப்பான், நைஜீரியா, கஜகஸ்தான், உக்ரைன், பெலாரஸ், ஜார்ஜியா, தஜிகிஸ்தான், அர்மேனியா ஆகிய நாடுகளில் இருந்தும் இந்த முறை மக்கள் மீட்கப்பட உள்ளனர். அதேபோல் அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் பலர் மீட்கப்பட உள்ளனர்.
யாருக்கு முக்கியத்துவம்
முக்கியமாக இதில் வெளிநாடுகளில் வேலையை இழந்தவர்ளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதன்பின் வெளிநாடுகளில் விசா காலாவதி ஆகி இருக்கும் நபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. மேலும் வயதானவர்கள், மருத்துவ தேவை இருப்பவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது.
அமெரிக்கா எப்படி
அதேபோல் அமெரிக்காவில் இருந்தும் பலர் இந்தியாவிற்கும் மீட்கப்பட உள்ளனர். இதற்காக அமெரிக்காவிற்கு 7 விமானங்கள் செல்கிறது. அமெரிக்காவில் இருந்துதான் இந்தியர்கள் பலர் நாடு திரும்புகிறார்கள். அதிகமாக கொச்சிக்கு 19 விமானங்கள் செல்கிறது.அதிகமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கொச்சிக்கு அதிக விமானங்கள் வருகிறது.