பூஜ்யம்தான்.. 60 வருடங்களில் இல்லாத அளவில் ஆசிய நாடுகள்.. சர்வதேச நாணய நிதியம் முக்கிய எச்சரிக்கை
டெல்லி: 60 வருடங்களில் முதன்முறையாக, ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி மோசமாக பாதிக்கப்பட்ட போகிறது என்று எச்சரித்துள்ளது சர்வதேச நாணய நிதியம் (IMF).
கொரோனா வைரஸ் தாக்கம் பல துறைகளையும் புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறது. வேலைவாய்ப்பு இல்லாமல் மக்கள் பெரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது ஐஎம்எப்.
உலக பொருளாதாரத்திற்கு இது ஒரு மிக மோசமான, சவாலான, காலகட்டமாகும். ஆசியா-பசிபிக் பிராந்தியங்கள் இதற்கு விதிவிலக்கு கிடையாது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. அனைத்து வகையான பொருளாதாரக் கொள்கை முடிவுகளையும் மாற்றியமைத்து, மக்களை ஏற்றம் காண செய்ய வேண்டிய நிலையில் ஆசிய நாடுகள் உள்ளன.
ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, இந்த வருடம் பூஜ்ஜியம் என்ற அளவில்தான் இருக்கப்போகிறது. 60 வருடங்களில் இது தான் முதல் முறையாக நடக்கக்கூடிய சம்பவம்.
பிற நாடுகளை விடவும், ஆசிய நாடுகள் பொருளாதாரத்தில் பெரும் அடிவாங்குவது குறைவுதான் என்றாலும், இந்த முறை பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. ஒருவேளை சிறப்பான பொருளாதார கொள்கைகளை வகுத்து அதை செயல்படுத்தினால் அடுத்த ஆண்டுக்கு 7.6 சதவீதம் என்ற வகையில் ஆசிய பொருளாதாரம் வளர்ச்சியடையும். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் என்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.
2008ஆம் ஆண்டு உலகளாவிய பொருளாதார மந்த நிலை நிலவியது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார மந்தம், மிக மோசமானது. இது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவிடாமல், கடைகளையும், வணிக நிறுவனங்களையும் மூடிவைக்கவும் செய்துவிட்டது.
இது முன் எப்போதும் நடக்காத ஒன்று. ஆசியாவின் முக்கியமான பொருளாதார நாடு சீனா. இந்த வருடம் அங்கு பொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கக்கூடும். 6 சதவீதம் என்ற அளவில் அதன் வளர்ச்சி இருந்த நிலையில் இவ்வாறு அதலபாதாளத்துக்கு சீன பொருளாதாரம் செல்ல போகிறது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு சீனா. எனவே எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து அது மீண்டு வந்துவிடுவோம் என்று நம்புகிறோம். இந்த வருடத்தின் பிற்பகுதியில் 9.2 சதவீதம் என்ற அளவுக்கு, பொருளாதார வளர்ச்சியை சீனா அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனை மீண்டும் சீனாவில் தலை தூக்காமல் இருந்தால் இந்த கணிப்பு பலித்துவிடும்.
அசிம் பிரேம்ஜி முதல் அம்பானி வரை.. கோடிகளில் குவிந்த நிதி.. கொரோனாவிற்கு எதிராக திரண்ட தொழிலதிபர்கள்
ஆசிய நாடுகளின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொருளாதாரரீதியாக உதவி செய்யவும், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் உதவி செய்யவும், என்ன தேவையோ அந்த மாதிரியான கொள்கைகளை வகுக்க வேண்டியது கட்டாயமாகும். இவ்வாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.