ஆச்சரியம்...முதன் முறையாக...4 மாதத்தில்...இந்தியாவில் கொரோனா தொற்று இந்த வாரத்தில் குறைவு!!
டெல்லி: இந்தியாவில் முந்தைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த வாரம் கொரோனா தொற்று பரவல் முதன் முறையாக குறைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்குப் பின்னர் குறைந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் கடந்த செப்டம்பர் 14-20 வரையிலான வாரத்தில் மொத்தம் 6,40,019 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது இதற்கு முந்திய செப்டம்பர் 7-13ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 5,000 குறைவாகும். அந்த வாரத்தில் மொத்தம் 6,45,014 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது. இதை வைத்துப் பார்க்கும்போது தினசரி சராசரியாக 91,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆனால், உயிரிழப்பு அதிகரித்து வந்துள்ளது. செப்டம்பர் 7-13ஆம் தேதி கால கட்டத்தில் உயிரிழப்பு 8,069 ஆக இருந்தது. இது செப்டம்பர் 14-20 கால கட்டத்தில் 8,175 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து கடந்த நான்கு வாரங்களாக குறைந்துள்ளது. கடந்த வியாழக் கிழமை 10,26,000 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இது நேற்று 10.1 லட்சமாக குறைந்துள்ளது.
கடந்த வாரம் தினமும் 90,000க்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இது முதன் முறையாக ஞாயிற்றுக் கிழமை 88,490 ஆக குறைந்துள்ளது. இத்துடன் இந்தியாவின் மொத்த தொற்று எண்ணிக்கை 54,83,038ஐ கடந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டும் 1,132 பேர் உயிரிழந்து இருந்தனர். இவர்களுடன் சேர்த்து நாட்டில் மொத்தம் இதுவரைக்கும் 87,844 உயிரிழந்துள்ளனர்.
கொரோனா முடிந்தாலும் 2 கோடி மாணவிகள் பள்ளி செல்ல முடியாது.. எச்சரிக்கும் மலாலா!
மகாராஷ்டிராவில் மட்டும் 20,598 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை 12 லட்சத்தை கடந்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை மட்டும் 455 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே நான்காம் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் இதுவரைக்கும் 5,41,993 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 46,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8,811 பேர் உயிரிழந்துள்ளனர்.