நாடு முழுக்க இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில்.. இதுவரை 97 பேர் மரணம்.. அமைச்சர் பியுஷ் கோயல் தகவல்!
டெல்லி: லாக்டவுனுக்கு இடையே நாடு முழுக்க இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் பயணித்த மொத்தம் 97 பேர் இதுவரை பலியானதாக நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் போடப்பட்டது. இந்த லாக்டவுன் காரணமாக திடீரென்று நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினார்கள்.
பல நூறு கிலோ மீட்டர்கள் இவர்கள் நடந்தபடியே சென்றதால் பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் வழியிலேயே பலியானார்கள். இதையடுத்து, இவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு ரயில்கள் மத்திய அரசு மூலம் இயக்கப்பட்டது.
வேளாண் கடன்... தள்ளுபடி செய்ய... திமுக எம்பி வில்சன் ராஜ்ய சபாவில் கோரிக்கை!!
சிறப்பு ரயில்கள்
மத்திய அரசு சார்பாக Shramik Specials எனப்படும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில்களிலேயே பலர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு பலியானார்கள். பலர் ரயிலிலேயே பசியால் உணவு இன்றி பலியான சம்பவங்கள் நடந்தது. நாடு முழுக்க இப்படி பலியான வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து விவரம் எதுவும் இல்லை என்று இரண்டு நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. மத்திய அரசின் இந்த பதில் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
பதில்
இந்த நிலையில் லாக்டவுனுக்கு இடையே நாடு முழுக்க இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் பயணித்த மொத்தம் 97 பேர் இதுவரை பலியானதாக நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன் கேள்விக்கு ராஜ்யசபாவில் பதில் அளித்த பியூஸ் கோயல், எங்களிடம் இருக்கும் விவரங்களின்படி கடந்த 9ம் தேதி வரை சிறப்பு ரயில்களில் பயணித்த 97 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் எல்லோரும் லாக்டவுன் காலத்தில் பயணம் செய்தவர்கள்.
வழக்கு பதிவு
இவர்கள் மரணம் குறித்து எல்லா மாநில போலீசும் முறையாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 97 பேரின் மரணத்தில் 87 பேரின் உடல் மாநில போலீசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை செய்ய இவர்கள் உடல் அனுப்பப்பட்டுள்ளது.
எத்தனைபேர்
இதில் 51 பேரின் பிரேத பரிசோதனை வெளியாகி உள்ளது. இவர்கள் மாரடைப்பு, நெஞ்சுவலி, இதய பிரச்சனை, பல வருடமாக இருந்த இதய கோளாறு, கிட்னி பிரச்சனை காரணமாக பலியாகி உள்ளனர் . சிலருக்கு மூளையிலும் குறைபாடுகள் இருந்துள்ளது. மத்திய அரசு ஆகஸ்ட் 31 வரை 4621 சிறப்பு ரயில்களை இயக்கியது. இதில் 6319000 பேர் பயணம் செய்தார்கள் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.