கொரோனா- நாடு முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து
டெல்லி: கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்புப் பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 3-வது வாரமாக லாக்டவுன் அமலில் உள்ளது. வரும் 14-ந் தேதியுடன் 21 நாட்கள் லாக்டவுன் முடிவடைகிறது.
இருப்பினும் லாக்டவுனை மேலும் நீட்டிக்கவே சாத்தியம் இருப்பதாக தெரிகிறது. நாடாளுமன்ற அனைத்து கட்சித் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது பேசிய மோடி லாக்டவுன் நீட்டிக்கப்பட சாத்தியம் இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நாளை கொண்டாடினர்.
ஏற்கனவே லாக்டவுனால் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் இன்று புனித வெள்ளியை முன்னிட்டும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் முக்கிய தேவாலயங்களில் இன்று பிரார்த்தனைகள் நடைபெறாது என்கிற அறிவிப்பு இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது.