லாக்டவுன்: அனைத்து குடும்பங்களுக்கும் 10 மாதங்களுக்கு ரூ7,500 வழங்க 22 எதிர்க் கட்சிகள் வலியுறுத்தல்
டெல்லி: கொரோனா லாக்டவுனால் அனைத்து குடும்பங்களுக்கும் 10 மாதங்களுக்கு ரூ7,500 நிதி உதவியை மத்திய அரசு நேரடியாக வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற 22 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாக திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, இடதுசாரிகள் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் சோனியா காந்தி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
WHO நிர்வாக வாரிய தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் - ஈபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து
தேசிய பேரழிவாக ஆம்பன் புயல்
இதில் பேசிய சோனியா காந்தி, கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். மேலும் பிரதமர் மோடி அறிவித்த ரூ20 லட்சம் பொருளாதார உதவித் திட்டம் குரூர நகைச்சுவை எனவும் சாடினார். இதன் பின்னர் ஒடிஷா, மேற்கு வங்கத்தை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது ஆம்பன் புயல். ஆகையால் ஆம்பன் புயல் சேதத்தை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்தியது.
மத்திய அரசுக்கு 11 கோரிக்கைகள்
மேலும் இந்த கூட்டத்தின் முடிவில் மொத்தம் 11 கோரிக்கைகள் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் 10 மாதங்களுக்கு அனைத்து குடும்பங்களுக்கும் ரூ7,500 நிதி உதவியை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் 6 மாத காலத்துக்கு 10 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும்; 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்பது இன்னொரு கோரிக்கை.
சொந்த மாநிலங்களுக்கு இடம்பெயர் தொழிலாளர்கள்
பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள இடம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் தங்களது மாநிலங்களுக்கு திரும்பிச் செல்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்; வெளிநாடுகளில் சிக்கி உள்ள மாணவர்கள் உள்ளிட்டோரையும் மத்திய அரசு தாயகத்துக்கு மீட்டு அழைத்து வரவேண்டும் என்பதும் சோனியா தலைமையிலான அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் வேண்டுகோள்.
மாநில அரசுகளுக்கு உரிய நிதி
தொழிலாளர் நல சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் கைவிட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்; கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநில அரசுகளுக்கு உரிய நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்பதும் மற்றொரு கோரிக்கை. பிரதமர் மோடி அறிவித்த ரூ20 லட்சம் கோடி திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; விமான சேவைகளை இயக்குவதற்கு முன் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.