மதுபான விலை கடும் உயர்வு.. குடிமகன்களின் போதையில் செம கல்லா கட்டும் கவர்மெண்ட்டுகள்
டெல்லி: 40 நாட்கள் லாக்டவுனால் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதில் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட மதுபான விலைகளை மிக அதிக அளவு டெல்லி, ஆந்திரா அரசுகள் உயர்த்திவிட்டன.
Recommended Video
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு மாநிலத்திலும் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் குரல். ஆனால் அரசுகள் எந்த ஒரு சூழ்நிலையிலும் செவிசாய்ப்பது இல்லை.
ஆனால் கொரோனா எனும் வைரஸ் தொற்று நோய் ஒரே அடியாக ஒரு நாள் 2 நாட்கள் அல்ல 40 நாட்கள் ஒட்டுமொத்தமாக தேசம் முழுவதுமே மதுபான கடைகளை இழுத்து மூட வைத்துவிட்டது. 40 நாட்களும் நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
மது என்பது மனைவிக்குச் சக்களத்தி...சாவின் ஒத்திகை... டாஸ்மாக் திறப்புக்கு எதிராக வைரமுத்து
திறந்துவிடப்பட்ட கடைகள்
இப்போதும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. ஆனால் மாநிலங்களில் அரசுகளுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு தாங்க முடியாத அளவுக்கு போனது. இதனால் கட்டுப்பாடுகள் தளர்வைப் பயன்படுத்தி மதுபான கடைகளை மாநிலங்கள் திறந்துவிட்டன. இந்த மதுபான கடைகளில் தனிமனித இடைவெளி, சமூக விலகல், முக கவசம் எதைப் பற்றியும் கவலையே படாமல் குடிமகன்கள் அலைமோதுகின்றனர்
வரிசையில் இடம்பிடிக்கும் வேலை
காஞ்ச மாடு பாஞ்ச மாதிரி என்பது போல வெறித்தனமாக மதுபான கடைகளை நோக்கி படையெடுத்து கொண்டே இருக்கின்றனர் குடிமகன்கள். விடிந்தும் விடியாததுமாக மதுபான கடை வாசலில் இடம்பிடிப்பதையே தொழிலாக்கிக் கொண்டவர்களும் ஏராளமாகிவிட்டனர். கையில் கிடைத்தது, வீட்டில் கிடந்தது என அனைத்தையும் வைத்து வரிசையில் இடம் பிடிப்பதே குடிமகன்களுக்கு பிரதான வேலையாகிப் போய்விட்டது.
டெல்லியின் அதிரடி
சரக்கு பற்றாக்குறையால் பல இடங்களில் மதுபான கடைகள் மூடப்படும் நிலைமை உருவானது. இந்த நிலையில் மாநிலங்களுக்கு வழிகாட்டியாக டெல்லி அரசு அதிரடியாக ஒரு முடிவை அறிவித்தது. மதுபானங்களின் மீது 75% அளவு சிறப்பு வரி விதித்தது. இதனால் மதுபானங்கள் விலை ஏறத்தாழ 2 மடங்கு உயர்ந்தது.
ஆந்திராவிலும் விலை உயர்வு
இதனையே பின்பற்றி ஆந்திரா அரசும் 50% விலை உயர்வை அறிவித்தது. ஆனால் வரிகள் உட்பட என கணக்குப் போட்டால் 70% உயர்வு கணக்கு வந்துவிடுகிறது. டெல்லி, ஆந்திரா பாணியில் பிற மாநிலங்களும் மதுபான விலையை கடுமையாக உயர்த்த வாய்ப்பு உள்ளது. ஆனாலும் குடித்தே ஆக வேண்டும் என்பதில் தீவிரமாய் இருக்கும் குடிமகன்கள், நாட்டுக்கு நன்கொடை தருகிறோம் என அசால்ட்டு பதிலை கொடுத்து மிரள வைக்கிறார்கள்