டெல்லியில் இருந்து உ.பி.க்கு... முதியவருக்கான மருந்துகளை ஈர இதயத்துடன் கொண்டு சேர்த்த போலீஸ்
டெல்லி: கொரோனா லாக்டவுன் காலம் ஈர இதயங்களையும் பொது சிவில் சமூகத்துக்கு அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கிறது. துயரம் தோய்ந்த லாக்டவுன் காலத்தில் நம்பிக்கையை விதைக்கும் நல்ல உள்ளங்கள்தான் ஆகப் பெரும் ஆறுதல்.
டெல்லியில் தடகள வீரர் குலாம் முஸ்தாபா கான், தமது ட்விட்டர் பக்கத்தில் போலீசாருக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். 744 கி.மீ. தொலைவில் உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தின் பெகும்புராவில் உள்ள தாத்தாவுக்கு மருந்துகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோள்.
இது ஒரு சவாலான நடவடிக்கைதான்... ஆனால் டெல்லி போலீஸ் ஏற்றுக் கொண்டு சாதித்துக் காட்டி இருக்கின்றனர். ஒரு தடகள ஓட்டத்தைப் போல டெல்லியில் இருந்து உ.பி. வரைக்கும் மருந்துகளை கொண்டு சேர்த்திருக்கின்றனர் போலீஸ்.
திங்கள்கிழமை மாலை 4.24 மணிக்கு குலாம் முஸ்தாபா கான் ட்விட்டரில் பதிவிடுகிறார்.. இதற்கு டெல்லி போலீஸ் அதிகாரி பர்வீந்த்சிங் உடனடியாக பதிலளித்ததுடன் மருந்துகளையும் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் வாங்கிவிட்டார். இரவு 7.35 மணிக்கு டெல்லியில் மருந்துகள் வாங்கிவிட்டாகிவிட்டது.
இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச போலீசாருடன் டெல்லி போலீசார் ஆலோசனை நடத்தினர். இந்த மருந்தை ஒரு தடகள ஓட்டம் போல கொண்டு செல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. முதலில் நொய்டாவில் கவுதமபுத்தா நகர் போலீசிடம் மருந்து ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் உ.பி.யின் சுல்தான்பூர் மாவட்டம் செல்லக் கூடிய ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் மருந்துகள் கைமாற்றப்பட்டன. அந்த ஓட்டுநர் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் டோல்கேட்டில் போலீசாரிடம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு மருந்துகளை ஒப்படைத்தார்.
கொரோனா லாக்டவுன்.. நெல்லையில் முதல் முறையாக தனிநபர் இடைவெளியுடன் திறந்தவெளி திரையரங்கு
இப்படியாக அடுத்தடுத்து மருந்துகளை ஒவ்வொரு இடமாக போலீசார் வாகனங்கள் மூலம் கொண்டு சென்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு நூருல் ஹட்டா என்ற முதியவரிடம் இந்த மருந்துகள் ஒப்படைக்கப்பட்டன.
ராயல் சல்யூட்!