இந்தியாவில் ஒரே முதல்வர்.. நேரடியாக சாலைக்கே வந்த மமதா.. கொரோனா நேரத்திலும் துணிச்சல் - வீடியோ!
கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் பொது இடங்களில் எப்படி இருக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி சாலையில் இறங்கி மக்களுக்கு விளக்கம் அளித்தார்.
டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொது இடங்களில் எப்படி இருக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி சாலையில் இறங்கி மக்களுக்கு விளக்கம் அளித்தார்.
Recommended Video
கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றோடு 2 நாட்கள் ஆகிறது. நாடு முழுக்க மக்கள் தீவிரமாக ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறார்கள்.
தலைவர்கள் வெளியே வரவில்லை
ஊரடங்கு என்பது மக்களுக்கு மட்டுமில்லை. அரசியல் தலைவர்களுக்கும்தான். இந்த கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுக்க மக்களை போலவே அரசியல் தலைவர்களும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர்கள் மட்டும், வெளியே செல்கிறார்கள். பிரதமர் மோடி கூட வீடியோ கான்பிரன்சிங் மூலம்தான் ஆலோசனைகளை செய்கிறார்.
தமிழகம் எப்படி
தமிழகத்திலும் இதேபோல் சட்டமன்ற கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மட்டுமே ஆலோசனைகளை செய்கிறார். மற்ற அமைச்சர்களும் வெளியே செல்வதை தவிர்க்க தொடங்கி உள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும் வெளியே சென்று ஆலோசனைகளை செய்கிறார். கொரோனா தொடர்பான பணிகளை மேற்கொள்கிறார்கள்.
மமதா பானர்ஜி
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொது இடங்களில் எப்படி இருக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி சாலையில் இறங்கி மக்களுக்கு விளக்கம் அளித்தார். இன்று கொல்கத்தாவிற்கு சென்ற அவர், போலீஸ் துணையுடன் சாலையில் இறங்கி நடந்தார். அங்கு மார்க்கெட்டில் காய்கறி விற்றுக்கொண்டு இருந்தவர்களுடன் உரையாடினார். யாரையும் தொடாமல் அவர் உரையாடினார்.
|
எங்கு வட்டம் வட்டம்
சாலையில் மார்க்கெட்டில் மக்கள் எப்படி நடமாட வேண்டும். மக்கள் எவ்வளவு தூரத்தில் நிற்க வேண்டும் என்று வங்க மொழியில் விளக்கினார். இதற்காக அவர் சாலையில் வட்டம் போட்டு காட்டினார். மக்கள் இவ்வளவு இடைவெளி விட்டுத்தான் நிற்க வேண்டும். ஒருவரை ஒருவர் தொட கூடாது என்று கையில் கல் ஒன்றை வைத்து தரையில் வட்டம் போட்டு மக்களிடம் விளக்கினார். அவரின் இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.