மகிழ்ச்சி தகவல்: கொரோனாவை குணப்படுத்தும் 'கோவிஃபார்' மருந்து இந்தியாவில் அறிமுகம்! ஒரு டோஸ் ரூ.6000
டெல்லி: கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு 'கோவிஃபார்' என்ற மருந்தை பயன்படுத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
Recommended Video
இந்த மருந்து ஒரு டோஸ் 5,000 முதல் 6,000 வரை செலவாகும் என்று தெரியவருகிறது. உலகம் முழுக்க மட்டுமின்றி, இந்தியாவில் சமீபகாலமாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த மருந்து களமிறங்கியுள்ளது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஹெட்ரோ மருந்து நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த மருந்தின் பெயர் 'கோவிஃபார்'. இதேபோல சிப்லாவும் மருந்துடன் களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா; 445 பேர் மரணம்; 2-வது இடத்தில் டெல்லி
கொரோனா சிகிச்சைக்கு நேரடி மருந்து
இதுவரை இந்தியாவில் கொரொனோ வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு நேரடி மருந்துகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. கொரோனா தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்தக்கூடிய ஏற்கனவே நடைமுறையில் உள்ள மருந்துகளை கொடுத்துதான் நோய்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது மருத்துவத்துறை. ஆனால் சமீப காலமாக கொரொனோ நோயாளிகள் இறப்பு விகிதம் என்பது அதிகரித்து வருவதால், கொரோனா வைரஸுக்கான நேரடி மருந்து கொடுக்கும் தேவை என்பது மிக மிக அதிகரித்து வந்தது. இந்த நிலையில்தான் 'கோவிஃபார்' கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் நேரடி மருந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளில் அனுமதி
அமெரிக்காவின் கிலீட் நிறுவனத்தின் ரெம்டெசிவிர் என்ற மருந்துக்கு, கொரோனா சிகிச்சைக்காக, ஐரோப்பிய மருந்து ஆணையம் மற்றும் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மேற்கத்திய நாடுகளில் நல்ல பலன் கிடைத்து வருகிறது. ரெம்டெசிவிர் மருந்தின் ஒரு வகை தான்'கோவிஃபார்'. எனவே இதற்கான அனுமதி கடந்த 20ஆம் தேதி கிடைத்துள்ளது.
இளம் வயதினர்
ஹெட்ரோ நிறுவனத்தின் தலைவர் பார்த்தசாரதி ரெட்டி இது பற்றி தெரிவிக்கையில், கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்துள்ள நிலையில்'கோவிஃபார்' மருந்துக்கு கிடைத்துள்ள அனுமதி, இதுபோன்ற நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கு உதவிகரமாக இருக்கும். இந்த மருந்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எளிதில் கிடைக்கும் வகையில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதித்த இளம் வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு இந்த மருந்து வழங்கப்படும். வெளிச்சந்தையில் இந்த மருந்து வாங்க முடியாது. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களால் மட்டுமே இந்த மருந்து கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
100 மில்லி கிராம் டோஸ்
'கோவிஃபார்' மருந்தின் ஒரு டோஸ் அளவு என்பது, 100 மில்லி கிராம் ஆகும். இதற்கு 5 ஆயிரம் முதல், 6 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அதிகபட்சம் 6 டோஸ் மருந்து கொடுக்கப்படும் என்று தெரிகிறது. எனவே, ஒரு நோயாளிக்கு இந்த மருந்தை கொடுப்பதற்கான செலவு 30,000 ரூபாய் வரை ஆகும் என்கிறார்கள் மருத்துவத் துறையினர்.
127 நாடுகள்
ஹெட்ரோ நிறுவனம் மட்டுமில்லை. ஜூபிலன்ட் லைஃப்சயின்ஸ், மிலன், டாக்டர் ரெட்டிஸ், பயோகான், சைடஸ் கெடிலா உட்பட பல நிறுவனங்கள் இந்த மருந்தின் உற்பத்தி மற்றும் விற்பனை அனுமதியைப் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் மருந்து தயாரிக்க ஆரம்பித்த பிறகு, 127 நாடுகளில் இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்து அனுமதி பெற்றன 3 மருந்துகள்
இது ஒரு பக்கம் என்றால் பேபிப்ளூ என்ற பெயரிலான கொரோனா மாத்திரைகள் 2 தினங்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. 34 மாத்திரைகளுக்கு 3,500 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில், இந்த மருந்து பயன்பாட்டால் 80-88 சதவீதம் வரை பலன் கிடைத்தது தெரியவந்தது. எனவே, கடந்த சில நாட்களில், இந்தியாவில், கொரோனாவுக்கு மொத்தம் 3 வகை மருந்துகள், அறிமுகமாகியுள்ளது, மகிழ்ச்சிக்குரிய செய்தியாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், ரெம்டிசிவிர் மருந்தின் வகையை, கிட்னி, கல்லீரல் பாதிப்புள்ளோருக்கும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார், கர்ப்பிணிகளுக்கு பயன்படுத்த கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.