இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது.. திடீரென அடுத்தடுத்து லாக்டவுன் தளர்வு.. இதுதான் காரணமோ?
டெல்லி: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து ஊரடங்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் நேற்று பெரிய அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் நிலையில் இப்படி தளர்வுகள் அறிவிக்கப்படுவது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.
தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள லாக்டவுனில் 90% தளர்வுகள் கொண்டு வரப்பப்பட்டுவிட்டது. இதை இட்லின்னு சொன்ன சட்னி கூட நம்பாது என்பது போல ''லாக்கே'' இல்லாமல் லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. வேகம் என்றால், உலகிலேயே இந்தியாவில்தான் தினமும் அதிக கேஸ்கள் வருகிறது.
கடந்த ஒரு வாரமாக சராசரியாக தினமும் 79 ஆயிரம் கேஸ்கள் இந்தியாவில் பதிவாகி உள்ளது.அதிலும் நேற்று ஒரே நாளில் 80092 கேஸ்கள் இந்தியாவில் பதிவானது. இதுவரை உலகில் எந்த நாட்டிலும் ஒரே நாளில் இத்தனை கேஸ்கள் பதிவானது இல்லை.
பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா.. தனியார் மருத்துவமனையில் அனுமதி!
கேஸ்கள் எப்படி
இந்தியாவில் இப்படி அதிகரிக்கும் கேஸ்களை பார்த்து உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளது.இந்தியாவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 3,621,245 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வெறும் ஆயிரம் சொச்சம் கேஸ்கள் இருந்த போதே லாக்டவுன் போடப்பட்டு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது தினமும் 80 ஆயிரம் கேஸ்கள் வரும் நிலையில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க தளர்வு
இந்தியா முழுக்க தற்போது அன்லாக் 4.0 தளர்வு கொண்டு வரப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. கூட்டங்களை 100 பேருடன் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், ஹோட்டல்கள் இயங்குகிறது. 9-12ம் வகுப்பு மாணவர்கள் விருப்பம் இருந்தால் பள்ளிக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே லாக்டவுன் இருக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் எப்படி
இந்தியா முழுக்க இப்படி லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னொரு பக்கம் தமிழக அரசும் அதிரடி தளர்வுகளை கொண்டு வந்துள்ளது. தமிழகத்திற்கு உள்ளே பயணிக்க இ பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு உள்ளே பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு லாக்டவுன் நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டது.
என்ன காரணம்
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் நிலையில் இப்படி தளர்வுகள் அறிவிக்கப்படுவது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. இதனால் இந்தியாவில் ஹெர்ட் இம்மியூனிட்டு எனப்படும் மந்தை எதிர்ப்பு சக்தியை கொண்டு வர திட்டமிட்டு விட்டனரா என்று கேள்வி எழுந்துள்ளது. அது என்ன ஹெர்ட் இம்மியூனிட்டி என்று கேட்கலாம்.. கொரோனா பாதிப்பிற்கு எதிராக ஹெர்ட் இம்யூனிட்டி (Herd Immunity) உதவுமா என்ற விவாதம் இணையம் முழுக்க எழ தொடங்கி உள்ளது.
எப்படி நோய்கள்
பொதுவாக கொரோனா போன்ற ஒரு கொள்ளை தொற்று நோய் ஒருவரை தாக்கிய பின் அந்த நோய் மீண்டும் பெரும்பாலும் அவரை தாக்காது. ஏனென்றால் ஒரு வைரஸ் நமது உடலை தாக்கினால் அதற்கு எதிர்ப்பு சக்தி நமது உடலில் இருக்கும். இதனால் அந்த நோய் மீண்டும் தாக்கியவரை பெரும்பாலும் தாக்காது. இங்குதான் ஹெர்ட் இம்யூனிட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
என்ன விளக்கம்
இதை மிக எளிதாக விளக்கலாம். 10000 பேர் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தை எடுத்துக்கொள்வோம்.அங்கு வேகமாக கொரோனா வைரஸ் பரவுகிறது. இப்போது அந்த வைரஸை பரவலை தடுக்க வேண்டும் என்றால், அந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை குறைந்தது 70% பேராவது பெற்று இருக்க வேண்டும். அதாவது 70% பேர் கொரோனா பாதிக்கப்பட்டு அதற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெற வேண்டும். 70% பேருக்கு கொரோனா வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருந்தால், அங்கு அந்த வைரஸ் மேலும் பரவுவது கடினம். அப்படியே பரவாமல் நின்று போகும்.
ஹெர்ட் இம்மியூனிட்டி
இந்தியாவில் 70% பேர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தால் மட்டுமே ஹெர்ட் இம்மியூனிட்டி சாத்தியம் ஆகும். இப்படி நடந்ததால் புதிதாக ஒருவருக்கு கொரோனா வந்தால் அவரால் வேறு ஒரு நபருக்கு கொரோனாவை பரப்ப முடியாது. ஏனென்றால் அவரின் அருகில் இருக்கும் நபர்களுக்கு ஏற்கனவே கொரோனா ஏற்பட்டு, அவர்களிடம் அதற்கான எதிர்ப்பு சக்தி உண்டாகிவிடும். இதனால் கொரோனா உள்ள ஒருவர் அதை பரப்ப முடியாமல் தோல்வி அடைவார்.. நோய் பரவும் சங்கிலி தடைபடும். இதனால் இந்தியாவில் ஹெர்ட் இம்மியூனிட்டி எனப்படும் மந்தை எதிர்ப்பு சக்தியை கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்களோ என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
வாய்ப்பு குறைவு
இந்தியாவில் இப்போது கொண்டு வரப்படும் லாக்டவுன் தளர்வுக்கும் இதுதான் காரணமாக இருக்குமோ என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் 70% பேருக்கு கொரோனா ஏற்பட்டால் பலியாகி வாய்ப்புள்ளது. பலி எண்ணிக்கை உச்சத்தை தொட வாய்ப்புள்ளது. இதனால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு பின்விளைவுகளும் மோசமாக இருக்கும். இதனால் ஹெர்ட் இம்யூனிட்டியை ஏற்படுத்த வேண்டும் என்று லாக்டவுனை நீக்குவதும் ஆபத்தாக முடியும். இதனால் இந்தியா உண்மையில் ஹெர்ட் இம்மியூனிட்டிக்கு முயற்சி செய்யுமா என்று கேள்வி எழுந்துள்ளது.