முஸ்லீம்களை பழி தீர்க்க கொரோனா கிடைச்சாச்சு.. வைரஸைவிட ஆபத்தானவர்கள் இவர்கள்.. உமர்அப்துல்லா காட்டம்
இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்துவதா என்று உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்
டெல்லி: கொரோனாவைரஸ் பரவுவதற்கு காரணமே முஸ்லிம்கள்தான் என்று அபாண்டமாக பழி சொல்ல கூடாது என்று உமர் அப்துல்லா காட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனாவைரஸையும், தக்லீத் ஜமாத்தையும் இணைத்து ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டு ட்வீட் செய்பவர்கள் எந்த வைரஸையும் விட ஆபத்தானவர்கள்... மனசு பூரா அவங்களுக்கு நோய்தான்" என்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா சற்று காட்டமாகவே தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தக்லிப் ஜமாத் நடத்திய மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்று அங்கு தங்கியிருந்த பலருக்கும் கொரோனாவைரஸ் தொற்று இருந்தது உறுதியானது.
அதனால் ஏராளமானோர் கொரோனா அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கண்டறியும் பணி தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சர்ச்சை
இதனிடையே கொரோனாவைரஸ் தொற்று பரவலுக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டு வருகிறது. தக்லிப் ஜமாத்தில் நடந்த விஷயத்தையும், கொரோனா தொற்று பரவலையும் தொடர்புபடுத்தி சிலர் சோஷியல் மீடியாவிலும் விஷமப் பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக தக்லிம் ஜமாத் சார்பில் மவுலானாவும் விளக்கம் தந்திருந்தார்.
கண்டனங்கள்
எனினும் அவதூறுகள் தங்கள் மீது தொடர்ந்து பரபரப்படுவதாக இஸ்லாமியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.. இது தொடர்பாக, இஸ்லாமிய பிரமுகர்கள் தங்கள் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லாவும் வன்மையான கண்டனத்தை ட்விட்டர் வாயிலாக பதிவு செய்துள்ளார்.. அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
முஸ்லிம்கள்
"டெல்லி நிஜாமுதீனில் தக்லிப் ஜமாத்தில் நடந்த சம்பவம், உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்று நோயை உருவாக்கி, முஸ்லிம்கள்தான் பரப்புகிறார்கள் என்று அவர்கள் மீது அவப்பெயர் ஏற்படுத்த வசதியான காரணமாகி விட்டது. நாட்டில் கொரோனாவைரஸ் தொற்று பரவுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று அபாண்டமாக பழி சொல்ல கூடாது.
அறிவுரைகள்
கொரோனாவைரஸை உருவாக்கி, அதை உலகம் முழுவதும் பரப்பியதே முஸ்லீம்கள்தான் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கக்கூடாது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அரசின் விதிமுறைகளை, ஆலோசனைகளை, அறிவுரைகளை மற்ற அனைவரையும் போல் கடைப்பிடித்து நடப்பவர்கள்தான்.
ஹேஷ்டேக்
கொரோனா வைரஸையும், தக்லிப் ஜமாத்தையும் இணைத்து ட்விட்டரில் ஹேஷ்டேக் வைத்து ட்வீட் செய்பவர்கள் எந்த வைரஸையும் விட மிகவும் ஆபத்தானவர்கள்... அவர்களின் உடம்பு நல்லா இருந்தாலும்.. மனசு முழுவதும் நோய்தான் நிரம்பியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில்தான் வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார் உமர் அப்துல்லா என்பது நினைவிருக்கலாம்.