முகாம் அலுவலகத்தை விட்டு 5 நாட்களாக வெளியே வராத மோடி.. தினமும் 200 பேருடன் தொலைப்பேசியில் பேச்சு
டெல்லி: நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தனது முகாம் அலுவலகத்தைவிட்டு 5நாட்களுக்கு மேலாக வெளியே வரவில்லை. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினமும் 200 பேரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசுவதாகவும் கொரோனா நிலைமையை அவர் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . இதுவரை 1050 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. 29 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிரா, கேரளாவில் பாதிப்பு மோசமாக உள்ளது. இரண்டு மாநிலங்களிலும் 200 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் மிக வேகமாக எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சமூக பரவலை தடுக்க பிரதமர் மோடி முன்னெச்சரிக்கையாக கடந்த 24ம் தேதி நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்தார். இதன் காரணமாக மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை வேறு எதற்காகவும் வீடுகளை விட்டு வர வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளது. சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
முகாம் அலுவலகத்தில் மோடி
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கில் 5 நாட்கள் கடந்த நிலையில் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 பேருடன் தொலைபேசியில் பேசி ஊரடங்கையும் கொரோனா நிலவரத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறாராம். இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், எண் 7, லோக் கல்யாண் மார்க் என்ற விலாசத்தில் 12 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் குடியிருப்பு முகாம் அலுவலக வளாகத்தை விட்டு பிரதமர் மோடி இதுவரை வெளியே செல்லவில்லை. பிரதமருக்குத் தேவையான அனைத்து வெவ்வேறு அலுவலகங்களும் இங்கேயே உள்ளது.. பிரதமர் எல்.கே.எம் அலுவலகத்தை தனது பணிக்காக அதிகமாகப் பயன்படுத்துகிறார். ஊரடங்கு அறிவித்த பின், பிரதமர் மோடி வீட்டிலிருந்தே பணியாற்றுகிறார் என்றார்கள்.
பிரதமர் அலுவலகம்
பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா ஒவ்வொரு நாளும் பிரதமர் மோடியை சந்திக்க அவரது இல்லத்திற்கு வருகிறார். அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபாவும் வருகிறார். மேலும், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையிலான அமைச்சர்கள் குழுவும் சந்திக்கிறது. சர்வதேச தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களிடமும் அவ்வப்போது பிரதமர் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பிரதமரை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்களும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மருத்துவர்கள்
இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றுநோயை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் போன்றோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு புத்துயிர் அளிப்பதற்காக, பிரதமர் மோடி நேற்று தனது மான் கி பாத் உரையில் வெகுவாக பாராட்டி பேசியதுடன் அவர்களை போர் வீரர்கள் என்று குறிப்பிட்டார்.
மக்களிடம் வேண்டுகோள்
இதுவரை கொரோனா வைரஸ் விவகாரத்தில் மூன்று முறை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். முதல் முறையாக மக்கள் ஊரடங்கை சோதனை முறையில் நடத்த வேண்டும் என்று பேசினார். இரண்டாவது முறை 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து அதற்கான காரணத்தை விளக்கினார். மூன்றாவது முறையாக நேற்று வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஊரடங்கை அறிவித்ததற்காக மன்னிப்பு கேட்டார். அத்துடன் ஊரடங்கை தவிர கொரோனாவை தடுக்க வேறு வழியில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டார். பிரதமர் வீட்டில் இருந்தபடியே கொரோனா தடுப்பு பணிகளை தற்போது உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.