கொரோனா: டிச.4-ல் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
டெல்லி: கொரோனா பாதிப்பு தொடர்பாக டிசம்பர் 4-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற அனைத்து கட்சித் தலைவர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த கூட்டத்தை பிரதமர் மோடி நடத்துகிறார்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் இருந்து வருகிறது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்த போதும் சில மாநிலங்களில் கொரோனா தாக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள், பரிசோதனைகள் படுதீவிரமடைந்துள்ளன. இதனிடையே டிசம்பர் 4-ந் தேதியன்று நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.