கொரோனா வைரசும்.. சில உண்மைகளும்.. யாரை அதிகம் பாதிக்கும்.. எப்படி பாதிக்கும்?
டெல்லி: கொரோனா வைரஸ் இந்தியாவில் 28 பேருக்கு பரவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து உலகின் 62 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இது இப்படி பரவ என்ன காரணம்,இதை தடுக்க முடியாதது ஏன்? யாரை கொரோனா அதிகம் பாதித்தது? யாரை அதிகம் பாதிக்கவில்லை என்பதை இப்போது பார்ப்போம்.
Recommended Video
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் இறைச்சி கூடங்களில் உருவான கொரோனா வைரஸ் பொதுமக்களுக்கு மெல்ல மெல்ல பரவி இருக்கிறது
இந்த வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதும்,மூச்சு காற்று மூலம் பரவும் என்ற விஷயமே ஜனவரியில் தான் சீன அரசுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்பு சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்களில் பலருக்கு கொரோனா வைரஸ் பரவிவிட்டது.
தாமதமாக உணர்ந்த சீனா
கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் மற்றும் உயிர்க்கொல்லி நோய் என்பதை சீனாவே தாமதமாக உணர்ந்த நிலையில் அந்த நோய் பாதிப்புடன் உள்ளவர்கள் பலர் பல நாடுகளுக்கு சென்றுவந்ததால் அந்த நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது மற்ற நாடுகளை காட்டிலும் சீனாவில் தான் இன்றும் மோசமாக உள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை சீனாவில் அரசாங்க கணக்குப்படி சுமார் 3000 பேர் இறந்துள்ளார்கள்.80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் மோசமாக பாதித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேரை பாதித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிகுறிகள் என்ன
இது வரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில்தான் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களூக்கு அறிகுறி என்று பார்த்தால் காய்ச்சல், தலைவலி, இருமல் என வழக்கமான அறிகுறியே இருக்கும். மற்றவர்களை போல் சாதாரணமாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் இருப்பார்கள்.
எப்படி கண்டுபிடிப்பது
ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க குறைந்தது 14 நாட்கள் அவரை தனிமையில் வைத்து பரிசோதிக்க வேண்டும். அதன்பிறகு தான் அவர் பாதிக்கப்பட்டாரா இல்லையா என்பதை வைரஸ் பரிசோதனையில் மட்டுமே அறிய முடியும். சில நேரங்களில் இரண்டு மூன்று வைரஸ் பரிசோதனை செய்த பின்னரே தெரியவந்திருக்கிறது. 28 நாட்களுக்கு பிறகே சிலருக்கு தெரிந்திருக்கிறது. எனவே 28 நாட்கள் ஒருவர் தனிமையில் இருந்தால் தான் முழுபாதிப்பு தெரியும்.
மூச்சுக்காற்று மூலம்
பொதுவாகவே மற்ற வைரஸ் காய்ச்சல்களை போல் அல்லாமல் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் மூச்சு காற்று மூலம் பரவும். அதாவது ஒரு நோயாளி இருமல் அல்லது தும்மும்போது, கொரோனா வைரஸ் அடங்கிய நீர்த்துளிகள் வெளியாகி அவை பரவுகின்றன. கொரோனா வைரஸ் தொற்று என்பது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே அதிகம் பாதிக்கிறது. எனவே சரியான முறையில் முகமூடி அணிவது கொரோனா பாதிப்பு வருவதை குறைக்கும்.
இறந்தவர்கள் யார்
இதுவரை இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விவரங்களை பார்த்தால் 60வயதை கடந்தவர்கள் தான்அதிகம் இறந்திருக்கிறார்கள். குறிப்பாக 80வயதை கடந்தவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். அத்துடன் இதயபாதிப்பு உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொரோனா பாதிப்பால் அதிகம் உயிரிழந்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பு வந்தது இல்லை. இதேபோல் இளம் வயதினரையும் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கவில்லை. கொரோனாவால் இவர்கள் பாதிக்கப்பட்ட போதிலும் மோசமான பாதிப்பு ஏற்படவில்லை.